கருணாநிதியை பார்க்க நேரில் வரவேண்டாம்: தலைமைக்கழகம் அறிவிப்பு!

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவேரி மருத்துவமனையிலிருந்து உடல் நலம் தேறி, கடந்த 7ஆம் தேதி அன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்து வந்த தலைவர் கலைஞருக்கு, 15.12.2016 அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் காவேரி மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 நேற்றையதினம் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக்காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞருக்கு மூச்சு விடுவதை இலகுவாக்குவதற்கான “டிரக்யாஸ்டமி ” சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கலைஞர் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைவர் கலைஞர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், தலைவர் கலைஞரை நேரில் பார்க்க வராமல் கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.