ஹம்பாந்தோட்டையை சோமாலியாவாக மாற்ற மஹிந்த முயற்சி! அரசாங்கம் குற்றச்சாட்டு!

இலங்கையின் கடற்படைக்கு களங்கத்தை ஏற்படுத்தவே ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கடற்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் விமர்சனத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாக ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்ட இரண்டு கப்பல்களை விடுவிக்கவே கடற்படை அங்கு அனுப்பப்பட்டது. இந்தக்கப்பல்கள் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமானவை.

கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்படும்போது, செயற்படும் வகையிலேயே கடற்படையினர் இந்த விடயத்தில் செயற்பட்டனர்.

போராட்டக்காரர்களின் முற்றுகையின்போது கப்பல்கள் மாத்திரமல்லாமல், அருகில் இருந்து எரிபொருள் குதத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது என்று ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போராட்டக்காரர்கள், பல உடமைகளை சேதப்படுத்தினர். இதன்காரணமாக குறித்த கப்பல்களுக்கு நட்டஈடாக 400,000 ஆயிரம் டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோமாலியாவைப் போன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் முத்திரை குத்த மஹிந்த முயற்சிக்கிறாரா? என்று விஜேவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இந்த சம்பவம் கூட்டு எதிர்க்கட்சியினால் திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம் என்றும் ராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், போராட்டம் நடத்திய பணியாளர்களுக்கு மஹிந்த ஆதரவு வழங்கினால், ஏன் தமது ஆட்சிக்காலத்தில் அவர் குறித்த பணியாளர்களை இலங்கை துறைமுக சேவையில் உள்வாங்கவில்லை என்றும் ருவன் விஜேவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.