வடக்கு முதல்வர் மகிந்தவிடம் பெற்ற விசேட சலுகை: அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

2013 ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தின் முதலாவது முதல்வராக நீதியரசர் விக்கினேஸ்வரன் கடமையாற்றி வருகின்றார்.

ஆனாலும் அவர் முதல்வராக இருந்தும் மாகாண சபை வெறும் தீர்மானங்களை நிறைவேற்றும் சபையாக மாத்திரம் இருக்கிறது என்றும் மக்களுக்கு தேவையான பணிகளை செய்வதில் செயற்திறன் குறைந்த சபையாகவே இருக்கிறது என்று பரவலான விமர்சனம் இருந்து வருகிறது.

வடக்கிற்கு வரும் பெரும்பாலான நிதி எந்த திட்டங்களும் இல்லாமல் திரும்பி போகும் நிலையே காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பரவலாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் முதல்வர் விக்கி தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதாவது தனது விமான பயணங்களுக்கு கடந்த நான்கு வருடஙௌகளில் 22 லட்சம் ரூபா செலவிட்டிருக்கிறார் என்றும் கடந்த 4வருடங்களில் வடக்கு முதல்வர் 48 விமான பய­ணங்­களை ற்கொன்டிருக்கிறார் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்தோடு இலங்கையின் வேறு எந்த மாகாண முதல்வரும் இந்த அளவு பயணங்களையோ செலவுகளையோ செய்ததில்லை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சந்திரசிறியின் மூலம் பெற்ற விசேட அனுமதியின் பெயரில் யாழில் இருந்து கொழும்பிற்குச் சென்ற விமானப் பயணங்களிற்காக இதுவரையில் 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாகனத்தில் கொழும்பு சென்றுவந்த நிலையில் முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தான் கொழும்பிற்கு விமானம் மூலமே சென்று வருவதனால் முதலமைச்சரின் பயணத்திற்கும் மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அரச நிதியில் அனுமதிக்கலாம் என விசேட அனுமதியினை வழங்கினார்.

மகிந்த ராயபக்சவினால் வழங்கப்பட்ட இந்த அனுமதியின் பிரகாரம் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான 4 ஆண்டுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் அரச செலவில் 48 தடவைகள் விமானம் மூலம் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார்.

இதற்காகவே குறித்த 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் முதலமைச்சர் 2014ம் ஆண்டில் 11 தடவைகளும் , 2015ம் ஆண்டில் 13 தடவைகளும் , 2016ம் ஆண்டில் 15 தடவைகளும் பறப்பில் ஈடுபட்டுள்ளதோடு 2017ம் ஆண்டில் 9 தடவைகள் பறப்பில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு பயணித்த 48 தடவைகளும் தன்னுடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்ற உதவியாளருக்கும் மாகாண சபையின் நிதியே வழங்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் 2014 , 2015ம் ஆண்டுகளில் ஓரு சேவைக்காக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டு முதல் இன்றுவரையில் ஓர் சேவைக்காக 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்படுகின்றது.

இதேநேரம் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வேறு எந்த மாகாண முதலமைச்சரிற்கும் குறித்த சலுகை தற்போதுவரையில் வழங்கப்படுவது கிடையாது..