சிறுமிகளிற்கு மீண்டும் யாழில் தொடரும் கொடூரம்!!

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்புணர்வுக்குட்படுத்தினர் என 21 வயது இளைஞர்கள் இருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

“சுழிபுரம் மத்தி, பல்லசுட்டி என்ற இடத்தில் 15 வயதுச் சிறுமியை 21 வயதான இளைஞன் தனது வர்த்தக நிலையத்துக்குள் வைத்து வன்புணர்வுக்குட்படுத்தினார். அந்தச் சிறுமி கர்ப்பவதியானார்.

எனினும் உறவினர்களும் அந்த இளைஞனும் சேர்ந்து சிறுமியை மிரட்டி சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து சிலர், அந்த இளைஞனுடன் பேசிய போது, அவர் அச்சுறுத்துகின்றார்” என்று சங்கானை சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

21 வயதுடைய இளைஞன் 14 வயதுச் சிறுமியுடன் சட்டத்துக்கு புறம்பாக இணைந்து வாழ்ந்முள்ளார்…

சங்கானை விழிசிட்டி என்ற இடத்தில் 21 வயதுடைய இளைஞன் 14 வயதுச் சிறுமியுடன் சட்டத்துக்கு புறம்பாக இணைந்து வாழ்ந்தார்.

ஊரவர்களின் எதிர்ப்புக் காரணமாக சில நாள்களில் அந்த இளைஞன் பிரிந்து சென்றுவிட்டார்.

சிறுமியின் எதிர்காலம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு வழங்கப்பட்ட மற்றொரு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சங்கானை பிரதேச பாதுகாப்பு அலுவலகர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிமன்றின் அறிவுறுத்தலைப் பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் போதுதான் சமூகத்தில் குற்றச்செயல்கள் குறைவடையும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். என ஊரவர்கள் தெரிவித்தனர்.