நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கையினை முன்வைக்க சகல உரிமையும் உள்ளதென மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஏகமனதான ஒத்துழைப்பு உள்ளதனால் தேர்தலில் எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
93 பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இதில் பொது எதிரணி உள்ளிட்ட சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட போதிலும் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றம் சென்று மீண்டும் தமக்கான வாய்ப்புகளை கோர முடியும்.
நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள்பரிசீலனைக்கான வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் இது குறித்து தமது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.
எனினும் அவ்வாறு மீள் பரிசீலனை குறித்து நீதிமன்றினால் அனுமதி வழங்கப்படுமாயின் குறித்த தொகுதியின் தேர்தல்கள் பிற்போகவும் வாய்ப்புகள் உள்ளன.
அத்தோடு இப்போதுள்ள நிலையில் சகல தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலைமை உள்ளதனால் தேர்தல் பிற்போக வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
எவ்வாறு இருப்பினும் நிராகரிக்கப்பட்ட நபர்கள் தமது நியாயமான கோரிக்கைக்காக நீதிமன்றம் செல்ல சகல உரிமையும் உள்ளது. அதை எவராலும் தடுக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.