பெண்களுக்கான படத்திலேயே பெண்களுக்கு மதிப்பில்லையா?: சரண்யா பொன்வண்ணன் கேள்வி

ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படம் ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார். நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் இன்று சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, நக்மா, இயக்குனர்கள் தரணி, மகிழ்திருமேனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தில் கார்த்தி ஒரு பாடலை பாடியுள்ளார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர், கார்த்தி பாடியிருந்த பாடலுக்காக அவரை புகழ்ந்து பேசினர். பின்னர் பேசவந்த சரண்யா பொன்வண்ணன் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

அப்போது அவர் பேசும்போது, இங்கு பேசிய நிறைய பேர் கார்த்தி பாடிய பாடலுக்காக அவரை பாராட்டினார்கள். இந்த படத்தில் நானும், ஊர்வசி, பானுப்பிரியாவும் சேர்ந்து ஒரு பாடலை பாடியிருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தை இங்கே யாரும் வெளியில் சொல்லவில்லை. பெண்களுக்கான படமாக உருவாகியுள்ள ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டிலேயே இதுபோல் பெண்களை புறக்கணிக்கலாமா? என்று கிண்டலுடன் பேசினார்.