நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா ஜோடி

நலிந்த தமிழக விவசாயிகள் 10 பேருக்கு நடிகர் பிரசன்னா – சினேகா தம்பதியினர் ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சிலர் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தனர். இதில் பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் பிரசன்னா – சினேகா தம்பதிகள் விவசாயிகளுக்கு உதவ முன்வந்தனர்.

அதன்படி, நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பிரசன்னா – சினேகா, நலிந்த 10 விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.2 லட்சத்தை நன்கொடையாக அளித்தனர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் வேளையில் பிரசன்னா – சினேகா அளித்துள்ள நன்கொடை பாராட்டுக்குரிய ஒன்றாகும். இந்நிகழ்ச்சி நடிகர் விஷாலால் துவக்கி வைக்கப்பட்ட “Friends Of Farmers” எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.

பிரசன்னா – சினேகாவின் இந்த உதவியின் மூலம் பி. பழனியாண்டி, வி.மூக்காயி, என்.தங்கராஜ், கே.ராஜி, ஆர். வெங்கடாசலம், பி. கணேசன், ஜி. மகாதேவன், ஆர்.சதாசிவம், பி.சிலம்பாயி /பழநிசாமி, ஜான் மைகேல் ராஜ் உள்ளிட்ட 10 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சுமார் 40 நாட்களாக தமிழக விவசாயிகள் சார்பாக டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.