வறுமையின் பிடியிலிருந்து மீண்டு வந்த சில்க் ஸ்மிதா

காலம் கடந்து இளைஞர்கள் மனதில் வாழும் சில்க் ஸ்மிதா 80ஸ் குயின் ஆக வலம் வந்தார். கவர்ச்சியான நடனம் மற்றும் ரோல்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளார்.

வறுமையில் இருந்து திறமையால் சாதனை
ஆந்திர மாநிலம் ‘ஏலூரு’ என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். ‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர் கொண்ட அவர், 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

வறுமை காரணமாக படிப்பை பாதியிலே முடித்து கொண்டார் சில்க். இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

1970-களில் மேக் அப் ஆர்டிஸ்ட் ஆக திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார் சில்க் ஸ்மிதா. கே விஜயன் இயக்கத்தில் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படம் 1980-ல் வெளியானது. இதில் தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி நடித்திருந்தார்.

வளர்ச்சியும், எதிர்பார்க்காத முடிவும்

சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார்.

அதுவரை விஜயலட்சுமி என்று அழைக்கப்பட்ட அவர், சில்க் ஸ்மிதா என்ற புனைப்பெயரால் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். இவரது கவர்ச்சியான நடனத்திலும் மூன்று முகம், சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும் கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா, செப்டம்பர் 23, 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். சில்க் ஸ்மிதா இறந்தாலும் மக்கள் மனத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.