சாலையில் நடந்து சென்ற சிறுமி… கடவுள் செய்த அதிசயம்!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக சிறுமி சாந்தினி (வயது 12) நடந்து சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துண்டு ஒன்று தவறி சிறுமியின் தலையில் விழுந்துள்ளது. அதில் இருந்த ஆணி சிறுமியின் தலையின் முன் பகுதியில் புகுந்தது. உடனடியாக அவள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், ஆணி சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்து 9 மி.மீட்டர் அளவுக்கு புகுந்தது தெரியவந்தது. இந்த ஆணியை அறுவை சிகிக்சை மூலம் எடுக்கமுடியும் என்று கூறினார்.

மருத்துவர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணியை வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஒரு மாதத்துக்கு பிறகு அவளுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.