கோர்ட்டில் சாட்சியாக நின்ற ஆஞ்சநேயர்….! நம்பினால் நம்புங்கள்….!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அய்யங்கார் குளம் என்ற ஊர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற, மிகப் பழமையான, ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த ஊரின் பெயருக்கேற்ப இந்தக் கோயிலின் முன்பாக, மிகப் பெரிய குளம் உள்ளது. இது கோடை காலத்திலும் வற்றாது, என்பது தான் சிறப்பு.
இந்த ஆலயத்தில் மூலவரைச் சுற்றி வரும் போது, பின்னால் உள்ள பாதையில், குனிந்து தவழ்ந்து தான் சென்று கடக்க முடியும். வாழ்வில், மனிதனுக்கு, எந்த சூழ்நிலையிலும் பணிவு தேவை, என்பதை உணர்த்தவே, இவ்விதம், ஒரு கட்டுமானத்தை அமைத்துள்ளார்கள்.
இத்தனை புகழ் வாய்ந்த இந்த ஆலயத்தின் உற்சவரான, ஐம்பொன்னால் ஆன, ஆஞ்சநேயர் சிலையை, இரவில், கோயிலுக்குள் புகுந்து, யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகமும், பொது மக்களும் சேர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த ஊரிலிருந்து, 7 கி.மீ. தொலைவில், உள்ள குளத்தில், இந்த சிலை கிடந்ததை, அந்த ஊர் மக்கள் கண்டு பிடித்து, அந்த சிலையை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருடிச் சென்றவர்கள், என்ன காரணத்தினாலோ, இந்த சிலையை, குளத்தில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
பின், அய்யங்கார்குளம் கோயிலைச் சேர்ந்தவர்கள், நீதி மன்றத்தில், அந்த சிலை, தங்கள் கோயிலில் இருந்து, திருடு போன, உற்சவர் சிலை என்று சொன்னார்கள். அப்போது, நீதிபதி, அந்த சிலையில் உள்ள அடையாளங்களைச் சொல்லச் சொன்ன போது, ஆஞ்சநேயர் கோயிலின் அர்ச்சகர், உற்சவர் சிலையில், இருந்த அடையாளங்களைச் சொன்னார்.
அப்போது, அர்ச்சகர் சொன்ன அடையாளத்தை, அந்த ஆஞ்சநேயர் சிலையை, நீதி மன்றத்தில் வைத்து, சரி பார்த்தனர். அர்ச்சகர் சொன்ன அடையாளங்கள், மிகச் சரியாக இருந்ததால், அந்த சிலை, அந்தக் கோவிலுக்கு வழங்கப் பட்டது.
இப்படி, நீதி மன்றத்திலும், தன்னை யார்? என்று அடையாளம் காட்டிய அந்த ஆஞ்சநேயரை, அய்யங்கார் குளத்தில் சென்று பார்த்து வழிபடுங்கள். காணாமல் போன, உங்கள் பொருள் விரைவில் கிடைத்து விடும், என்று, அங்குள்ள மக்கள் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள்.