மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்கையில் விபரீதம்!

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மகளும், தாயும் படுகாயமடைந்துள்ளனர்.

தாய், தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில், கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தாய் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றபோது, மரக்கறிகள் ஏற்றி சென்ற கன்டர் ரக வாகனத்துடன் சந்தியில் வைத்து மோதியுள்ளது.

இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும், மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மரக்கறி வாகனத்தையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.