தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம் .. பரபர தகவல்கள்

தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நடுவே ஏற்பட்ட பிளவுக்கு, பணப் பிரச்சினைதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ரத்த வாரிசு என்பது தீபக் மற்றும் தீபா ஆகிய அவரின் அண்ணன் பிள்ளைகள்தான். இதில் தீபக் ஆரம்பம் முதலே சசிகலாவுடன் இருந்தார். அவரை தனது தாய் போன்றவர் என புகழுரைத்து வந்தார்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை பகிர்வதில் தீபக் திருப்தியடைந்திருந்ததே இந்த நெருக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

தீபக் கதி
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சசிகலா சிறை சென்றபிறகு, அவரின் அக்கா மகன் டிடிவி தினகரன், தீபக்கை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லையாம். எனவேதான் தினகரனுக்கு அதிமுக தலைமை பொறுப்பு தகுதியற்றது என பேட்டியளித்தார் தீபக்.

மாதவனுக்கு பரம திருப்தி
இந்த நிலையில், தீபாவுக்கும் ஜெயலலிதா சொத்தில் பங்கு பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கிடைக்கும் பங்கில் தீபாவின் கணவர் மாதவன் திருப்தியடைந்தபோதிலும், தீபாவின் கார் டிரைவரோ, தீபாவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவருக்கு தூபம் போட்டாராம்.

பேராசை
ஹைதராபாத் திராட்சை தோட்டம் அல்லது ரூ.100 கோடி என்ற பேரத்துக்கு மாதவன் ஓகே சொன்னாலும், தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் தீபாவோ ரூ.1500 கோடிக்கு அடிபோட்டதாக கூறப்படுகிறது.

வளைத்து போட்டனர்
இதனால் கணவன் மனைவியிடையே ஓயாத தகராறு. இதை பயன்படுத்திக்கொண்ட ஆளும் தரப்பின் முக்கிய புள்ளி ஒருவர் மாதவனை வளைத்து கைக்குள் போட்டுக்கொண்டு, கார் ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தீபாவுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்து, அவரை அரசியலில் இருந்து காலி செய்ய ஐடியா போட்டு கொடுத்தாராம்.

வாக்கு சிதறாது
இன்று மாதவன் அதை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். தீபாவை நம்பிய தொண்டர்களுக்கும் இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் தீபா செல்லாக்காசாக போனால், அதனால் சசி தரப்பு அதிமுக வாக்குகள் சிதறாது என்பது ஆளும் தரப்பின் எண்ணமாக உள்ளதாம்.