விவசாய அமைச்சர் புத்தி மாரம்பே அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய விவசாயக் கொள்கை திட்டமிடல் குழு, விவசாயப் புத்தாக்கத் திட்டக் குழு, சிறு வர்த்தக விவசாய பங்கேற்பு திட்டத்தின் ஆலோசகராக இதுவரை இருந்து வந்தார்.

அவர் பல வருடங்களாக, இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் கிளைபோசேட் களைநாசினி இறக்குமதியை தடை செய்த போது, அதற்கு எதிரான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழல் நட்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக பல்கலைக்கழக சமூகம், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை தூண்டும் வகையிலான அறிக்கைகளை விடுவதாக, விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.