பிக்பாஸ் மக்கள் போடும் ஓட்டு எல்லாம் சரியான போங்கு… சாடிய நடிகர்..!

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓட்டு எல்லாம் சரியான போங்கு என்று பிரபல நடிகர் ஒருவர் சாடியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று கடைசியாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே பார்வையாளர்களிடமும் சகபோட்டியாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்று வந்த தர்ஷன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கூட “பார்வையாளர்கள் மீது தான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் நெறியுடன் விளையாடியதில் என்னால் பிழை கண்டுபிடிக்கமுடியவில்லை. உங்களுக்காக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். 70-களில் நடிக்க வந்த நடிகர்கள் எல்லாம் பார்த்து பொறாமைப்படும் புகழ். குற்றமென்ன கண்டீர் என்ற கேள்வி எனக்கு இந்த நேரத்தில் எழுகிறது” என்றார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் மேடைக்கு வரும்போது பார்வையாளர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் அதிர்ந்தன. பலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் அனைவருக்கும் தனது புன்னகையை பரிசாக்கிய தர்ஷன் வெளியேறும்போது தனது இரண்டு கரங்களால் பார்வையாளர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு வெளியேறினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் இந்தத் தருணத்தைக் கண்டு நெகிழ்ந்தனர்.

அதேசமயம் பார்வையாளர்களின் மனதை வென்ற தர்ஷன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்றும் சமூகதளவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கடைசி நேரத்தில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

மக்கள் செலுத்தும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறாரா அல்லது நிகழ்ச்சிக்குழுவின் முடிவின் படி தீர்மானிக்கப்படுகிறாரா என்பதுதான் அந்தக் கேள்வி.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், அட போங்கயா இந்த ஓட்டு எல்லாம் சரியான போங்கு என்று கூறியுள்ளார்.

இயக்குநர் சேரன், ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான். அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.” என்று கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீப்ரியா, ஐயோ மறுபடியும் தப்பா ஓட்டுப் போட்டுட்டாங்களோ?தர்ஷன் வெளியேற்றம் சற்று ஏமாற்றம் தான்!” என்று பதிவிட்டுள்ளார்

 

 

 

 

 

 

 

 

நடிகையும் முதல் சீசன் போட்டியாளருமான ஆர்த்தி தனது ட்விட்டர் பதிவில், ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன். மக்களால் போற்றப்படுபவர்கள் பிக்பாஸால் வெளியேற்றம் செய்யப்படுவார். நீங்கள் தான் வெற்றியாளர். உங்களால் உங்கள் நாட்டுக்கு பெருமை” என்று கூறியுள்ளார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்று தர்ஷன் விவகாரத்தில் உண்மையானாலும், பார்வையாளர்களிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது நிகழ்ச்சிக்குழு.