நட்சத்திர சொகுசு ஹொட்டலில் ஜாலியாக இருந்த தொழிலதிபர்! அவர் செய்த மோசமான செயல்?

இந்தியாவில் சொகுசு நட்சத்திர ஹொட்டலில் 100 நாட்கள் தங்கிய தொழிலதிபர் லட்சக்கணக்கிலான கட்டணத்தை செலுத்தாமல் தப்பிய நிலையில் பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் சங்கர் நாராயணன் என்ற நபர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா என்ற சொகுசு ஹொட்டலில் தங்கி உள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை 102 நாட்கள் தங்கி இருந்த அவர், ஹொட்டலில் சொகுசாக இருந்ததோடு அங்குள்ள சேவைகள் அனைத்தையும் அனுபவித்து வந்துள்ளார்.

இதையடுத்து சுமார் 26 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு ஹொட்டல் நிர்வாகம் அவரிடம் ரசீதைக் கொடுத்துள்ளது.

ஆனால் 13 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை மட்டும் செலுத்திய அவர், 12 லட்சம் ரூபாயை செலுத்தாமல் தப்பி ஓடி விட்டதாக ஹொட்டல் நிர்வாகம் புகார் கூறியுள்ளது.

அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, மீதி பணத்தை செலுத்தி விடுவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் அதன் பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாகவும் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பில் முழுவதையும் செலுத்திய பின்னரே விடுதியை விட்டு வெளியேறியதாகவும், அபாண்டமாக குற்றம்சாட்டும் விடுதி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சங்கர் நாராயணன் கூறியுள்ளார்.