ஒரே நேரத்தில் 3 பேருக்கு மரண தண்டனை!

பஹ்ரைனில் ஒரே நேரத்தில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என சர்வ தேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

பஹ்ரைனில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு, கொலை, நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக துப்பாக்கி, வெடிபொருட்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இருவர், தனது சொந்த மசூதியின் இமாமை படுகொலை செய்த ஒருவர் என 3 பேரின் மரண தண்டனை ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.

ஆனால் சட்ட விரோதமான அல்லது தன்னிச்சையான மரண தண்டனை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலமார்ட், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அலி முகமது ஹக்கீம் அராப், அகமது ஈசா மலாலி ஆகிய இருவரும் சித்ரவதைகளின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டதாகவும்,

அவர்கள் மீதான விசாரணை நியாயமற்ற ரீதியில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்படும் இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் அவரது கோரிக்கை பஹ்ரைன் அதிகாரிகளால் செவி சாய்க்கபடவில்லை என தெரியவந்துள்ளது. தண்டிக்கப்பட்ட 3 பேரும் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.