சுவிட்சர்லாந்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கை நாட்டவர்!

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 49 வயது இலங்கையர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மண்டலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

29 வயது இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டில் முடிவுக்கு வந்தது. இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர்,

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 49 வயது இலங்கை நாட்டவர், சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடமும் கோபமாக பெருமாறியதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த அடுத்த நாளே, மண்டல பொலிசாரால் குறித்த 49 வயது இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

ரயில் நிலையத்தில் உள்ள உணவு விடுதியில் வைத்தே அந்த இளைஞருடன் குறித்த இலங்கையர் பிரச்னையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் ஒருபகுதியாகவே அதே ரயில் நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் அந்த இளைஞரை அவர் சுட்டுள்ளார்.

மட்டுமின்றி, அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீதும் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த இலங்கையர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதி தொடர்பில் உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.