தற்கொலை முயற்சியால் அகோரமான இளைஞரின் முகம்..

அமெரிக்காவில் கன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞருக்கு, புதிய முகத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கேமரான் என்ற இளைஞர், கடந்த 2016ஆம் ஆண்டு வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை மறக்க முடியாமல், துப்பாக்கியால் தனது கன்னத்தில் சுட்டுக்கொண்டார்.

இதனால் அவரது தாடை, பற்கள், மூக்கு ஆகியவற்றை துப்பாக்கி குண்டு முற்றிலும் சிதைத்தன. அதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கேமரான் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவரது முகம் முற்றிலும் சிதைந்தது. அதன் பின்னர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள சிறப்பு மருத்துவர்களின் உதவியை கேமரான் நாடியுள்ளார்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கேமரானுக்கு, சுமார் 100 மருத்துவர்கள் தொடர்ந்து 25 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன் விளைவாக கேமரானின் முகம் ஓரளவு வடிவம் பெற்றது.

எனினும், மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து 11 மாதங்கள் இருந்தார். அதன் பின்னர் தற்போது அவரது முகம் பொலிவுடன் மாறிவிட்டது.

இதுகுறித்து கேமரான் கூறுகையில், ‘என்னால் இப்போது சிரிக்க முடிகிறது. பேச முடிகிறது. கடினமான உணவுகளையும் சாப்பிட முடிகிறது’ என தெரிவித்துள்ளார். கேமரானின் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.