வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு! இலங்கையை தாக்க போகும் சூறாவளி?

வங்கக் கடலில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

எதிர்வரும் 23ஆம் திகதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளியாக உருமாற்றம் அடையுமா? என்பது பற்றி தற்போது தெளிவாக கூறமுடியாதுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இதேவேளை, அந்தமான் மற்றும் வங்கக் கடலில் எதிர்வரும் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையமும் உறுதி செய்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு நிலையம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை எதிர்வு கூறலில், தெரிவித்துள்ளதாவது,

“வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் எதிர்வரும் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும். மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இதன் தாக்கம் இலங்கைக்கு ஏற்படக்கூடியதாக இருக்குமா? என்பது பற்றி தற்போது கூற முடியாதுள்ளதுடன் ஏற்படப் போகும் தாழமுக்கம் இந்தியாவின் மேற்பகுதியூடாக நகர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.