பழங்களை சாப்பிட்டு தோல்களை எறிபவரா நீங்கள்?

இயற்கை ஓர் அற்புதம், அதன் கொடை மகத்தானது. இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடிய பழங்களும் காய்கறிகளும் ஏராளம்.

அனேகமானவர்கள் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோல்களை வீசிஎறிந்துவிடுவோம்.

ஆனால் பழத்தைவிட, அதன் தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் தோல்கள் கடினமானவையாக இருக்கும் என்பதால் பயன்படுத்த முடியாது.

ஆனால், கொய்யா, மாம்பழம், ஆப்பிள் போன்ற சில பழங்களைத் தோலுடன் சாப்பிட முடியும். அப்படி சாப்பிடக்கூடிய பழங்களின் தோல்களை பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

மாம்பழத் தோல்

மாம்பழத்தில் உள்ள அளவுக்கு, அதன் தோலிலும் வைட்டமின் சி சத்து அடங்கி உள்ளது. மாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெல்ல நீங்கும். இதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் கருமை நீங்கும்.

வாழைப் பழத்தோல்

வாழைப்பழத் தோலை வெயிலில் நன்கு உலரவைத்து, அதைப் பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில், மாவுச்சத்து, புரதச்சத்து நிறைவாக உள்ளது. இதை, பாலில் கலந்து பயன்படுத்தினால், அது முழு உணவாகச் செயல்படும்; பாலின் சுவையையும் கூட்டும், வாழைப்பழத்தோலின் உட்பகுதியைப் பற்களில் தேய்த்துவர, பல்லின் மஞ்சள் தன்மை நீங்கி, பளிச் வெண்மை பெறும்.

ஆரஞ்சுப் பழத்தோல்

ஆரஞ்சுப்பழத் தோலை சேகரித்து, ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன்படுத்தலாம். ஆரஞ்சுப்பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து, வாஷ்பேஸின், கிச்சன் மேடை போன்றவற்றைச் சுத்தப்படுத்த ஸ்க்ரப்பர் போலப் பயன்படுத்தலாம்.

மேலும் பாதவெடிப்புகளில் தோலைப் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சுப்பழத் தோலைப் பொடி செய்து, டீத்தூளுடன் சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்த, டீயின் சுவை கூடும். தொடர்ந்து எடுத்துவந்தால், புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

மேலும், இந்தப் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும்.

ஆரஞ்சுப்பழத் தோல் பொடிக்கு, பற்கூச்சத்தை நீக்கும் வல்லமை உண்டு. இதனை, வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். இதன் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.

மாதுளம் பழத்தோல்

மாதுளம்பழத்தைப் போலவே, இதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய்துர்நாற்றம் நீங்கும். மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன் படுத்தலாம்.

மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும். மாதுளம்பழத் தோலைச் சாப்பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும், எலும்பை வலுவாக்கும்.

எலுமிச்சை பழத்தோல்

பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.

சப்போட்டா பழத்தோல்

சப்போட்டா பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதைவிட, அதை அப்படியே சாப்பிடுவதே சிறந்தது. இந்தப் பழத்தைத் தோலுடன் சாப்பிட, வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படும். சப்போட்டா தோல் வயிறு, குடல் புற்றுநோயைத் தடுக்கும் வல்லமை கொண்டது.