திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு! – குண்டு பாய்ந்து மணமகன் பலி!

வடமாநிலங்களில், திருமண ஊர்வலத்தின்போது, வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுடும் வழக்கம் உள்ளது. அதேபோல், வடகிழக்கு புதுடெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் நடந்த திருமண ஊர்வலத்தின்போது, உறவினர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதில், அந்தக் குண்டு எதிர்பாராமல் மணமகன் மீது பாய்ந்து மணமகன் உயிரிழந்தார்.

 

புதுடெல்லியில் உள்ள சீமாபுரி நகரைச் சேர்ந்தவர் தீபக். நேற்று மாலை தீபக்கின் திருமணம் நடக்க இருந்தது. திருமண விழாவில் மணமகன் குதிரையில் அமர்ந்து இருந்தபடி ஊர்வலத்தில் வந்தார். அப்போது, திருமண விழா கொண்டாட்டத்தின் உற்சாக மிகுதியில், தீபக்கின் உறவினர் ஒருவர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அந்தக் குண்டு எதிர்பாராமல்மணமகன் தீபக் மீது பட்டதில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து, உறவினர்கள் தீபக்கை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி மணமகன் தீபக் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீபக்கின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உறவினருக்குத் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது, அதற்கான உரிமம் பெற்றுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.