பதவி விலகமாட்டேன் – ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க முயற்சித்து வரும் நிலையிலேயே, சிறிலங்கா பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை என்பதை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேவேளை, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், எதிர்கால தலைமைத்துவ குழு ஒன்றைக் கட்டியமைக்கும் வகையில் ஐதேகவில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு, பிணைமுறி மோசடி விவகாரம் முக்கிய காரணம் என்றும், திருடர்களைப் பிடிப்பதில் ஏற்பட்ட தாமதம் அதில் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.