ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள், எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியை அமைத்து கொள்வார்கள்!!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள். கட்சியைப் பற்றியோ, கொள்கை பற்றியோ அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் குறித்த உங்கள் கருத்து என்ன என முதலமைச்சரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னரும் பல தடவைகள் நான் கூறியிருக்கின்றேன். அந்தக் கருத்து இப்போது பலராலும் வலியுறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

தேசியத்துடன் சம்மந்தப்பட்ட சகல கட்சிகளும் எழுத்து மூலமாக வெளியிடும் ஆவணங்கள் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களில் கொள்கை ரீதியான ஒன்றுமை உள்ளது.

ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளில் கொள்கை ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் இணைவது அல்லது பிரிவது தொடர்பில் இப்போது ஒன்றும் கூற இயலாது. காரணம் இறுதியாக அவர்கள் என்ன அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்போகிறார்கள் என்பது எமக்குத் தெரியாது.

ஆனால் எப்பாடு பட்டேனும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காக கொண்டவர்கள் எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியமைத்து விடுவார்கள். அவர்கள் கட்சியை பற்றியோ, கொள்கையை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள்.

ஆனால் அந்த நிலைப்பாடு அவர்களுக்கு உடனடிப் பாதிப்பைக் கொடுக்காமல் விடலாம். ஆனால் நீண்டகாலப்போக்கில் நிச்சயமாக அது பாதிப்பைக் கொடுக்கும். இதற்கு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த உதாரணம் எனவும் முதலமைச்சர் கூறினார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்ளை ரீதியாக இணைய முடியுமாக இருந்தால் மட்டுமே இணையவேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.