தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது!

சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே.

ஆனால், கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தமிழ், தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் கமல்ஹாசன் உறவாகப் பேசிய செய்திகளை தவறாக சித்தரித்து கர்நாடகத்தில் ஒட்டப்பட்டிருந் ‘தக் லைஃப்’ திரைப்பட சுவரொட்டிகளையும், பேனர்களையும் கிழித்தெறிந்து போராட்டங்களைக் நடத்திக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது.

அதற்கும் ஒருபடி மேலே சென்று, கன்னட இனவெறி அமைப்புகளை ஆதரிக்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியும், முதல்வருமான சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர், கமல்ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா என பல்வேறு கேள்விகளை நீதிபதி நாகபிரசன்னா எழுப்புகிறார்.

அதுமட்டுமின்றி, நானே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் பார்க்க முடியாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. இதுதான் நீதிபதி நாகபிரசன்னாவின் கேள்விகள். அவர் நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராக இருந்து அக்கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தான், கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் நீதிபதி நாகபிரசன்னாவும் பேசியிருக்கிறார். இது தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி தமிழர் எதிர்ப்பை மேலும் மேலும் தூண்டி விடுகின்ற செயலாகும். நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள்.

ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார். அவரது இனப்பற்றை போற்றுகிறோம். கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு பேசியுள்ளார்.

கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது. அதே நேரத்தில், தமிழ் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன்வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால், தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்ப கலைஞர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது காதலனை அறிமுகம் செய்த சீரியல் நடிகை!

சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஆர்த்தி சுபாஷ்.

யூடியூப் வெப் தொடரில் நடித்து வந்த ஆர்த்தி முதன்முதலில் நடித்த பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அதிகம் பிரபலமானார்.

பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அந்த தொடரும் முடிவுக்கு வர இப்போது விஜய் டிவியிலேயே சிந்து பைரவி என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்த ஆர்த்தி சுபாஷ் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

சன் டிவியில் Mr.Manaivi சீரியலில் நாயகனாக நடித்த பவன் ரவீந்திராவை தான் காதலிக்கிறாராம். இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

திருகோணமலையில் வீதிக்கு இறங்கிய மக்கள்!

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று (04) காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இதுபோன்ற மிலேச்சுத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது “பாமர மக்கள்மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே”, “தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்” அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது .

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமது நண்பனை பார்வையிட , வைத்தியசாலையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் இரு இளைஞர்களும் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காத நிலையில் , அவர்களை மீறி உள்நுளைந்துள்ளனர்.

அதனை அடுத்து வைத்தியசாலையில் பணியில் இருந்த பொலிஸார் இருவரையும் தடுத்து நிறுத்திய வேளை அவர்களுடனும் முரண்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பருத்தித்துறை பொலிஸார் நீதவான் நீதிமன்றில் இருவரையும் முற்படுத்திய வேளை இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தினை ஏற்ற மன்று, இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல அனுமதித்தது.

யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகனின் மாம்பழம்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாம்பழத்தின் விலை பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4,60,000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு புதிய நடைமுறை!

பாடசாலை கட்டமைப்பிற்குள் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான தரவுக் கோப்பு தயாரிக்கப்படும் எனவும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி மாற்றத்தின் கீழ், கல்வித்துறை, கல்விசாரா ஊழியர்கள், சிறுவர்கள் மற்றும் பாடசாலை உட்பட கல்வித்துறையில் உள்ள அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி தரவு முகாமைத்துவ அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டது.

தேசிய பிறப்புச் சான்றிதழ்கள், தேர்வு முடிவுகள், திறன்கள் உள்ளிட்ட பிள்ளைகளின் அனைத்து தரவுகளையும் இந்த அமைப்பில் சேர்க்க இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி மாற்றத்திற்கு ஏற்ப, பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பது, ஆசிரியர் மற்றும் அதிபர் வெள்ளிடங்களை அடையாளம் காண்பது, நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் செய்தல், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறையை செயல்படுத்துதல் மற்றும் பாடசாலை பௌதீக வளங்களை மேம்படுத்துதல் போன்ற செயல்முறைகளை இந்த தரவு அமைப்பு எளிதாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தாண்டு முதலாம் ஆண்டு முதல் மற்றும் 6ஆம் ஆண்டு வகுப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படையில் இந்த தரவு அமைப்பைத் தொடங்குவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி தரவு மேலாண்மை அமைப்பின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை இலங்கை விமானப்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின்சார கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதை தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(03.06.2025) உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள்.மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும் அறியத்தாருங்கள்.

மேலும், IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு!

இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில், இளைஞர்கள் மத்தியில், மாரடைப்புஅதிகரித்து வருவது தொடர்பில், முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் 40 வயதுக்குட்பட்டவர்களில் அரிதாக இருந்த மாரடைப்பு, இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும், 20 மற்றும் 30 வயதுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தாம் சந்திப்பதாக கூறும் அவர், அதில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல், மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இந்த நிலைமைக்கு, நவீன வாழ்க்கை முறை உள்ளது. குறிப்பாக, மோசமான உணவு, உடல் செயலற்ற தன்மை, நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை என்பன மாரடைப்புக்கான முக்கியம் மூல காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்கள் 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதற்கு ஜிம் தேவையில்லை. நடைபயிற்சி என்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

அசாதாரண சோர்வு, படபடப்பு
தூக்கமின்மை ஒரு முக்கிய இருதய ஆபத்து காரணி என்பதை பலர் உணரவில்லை. மோசமான தூக்கம் மன அழுத்த ஹோர்மோன் அளவை (கார்டிசோல் போன்றவை) அதிகரிக்கிறது.

குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் தமனிகளை சேதப்படுத்துகிறது ஆகவே ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேரம் தரமான தூங்குங்கள். இது ஒரு மருத்துவத் தேவையாகும் என்று மருத்துவர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். விதை எண்ணெய்களைத் தவிர்த்து, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை உட்கொள்ளவும்.

உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும். இந்த நிலையில், அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால், அவற்றை புறக்கணிக்காதீர்கள் என்றும் இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய ராசிபலன்கள்04.06.2025

மேஷம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியும் கூடும் நாள்.

சிம்மம்

இதுவரை இருந்த காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்‌. கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக கவனம் தேவை. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.

தனுசு

பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சியான நாள்.

விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான வரிச் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26, 2024 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 24, 2024 வரை இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கலால் ஆணையர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (03) யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் ஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கலால் ஆணையர் எம்.ஏ. குணசிறி, மேலதிக கலால் ஆணையர் ஏ.எம்.பி. அரம்பலா, துணை ஆணையர்கள் சி.ஜே.ஏ. வீரக்கொடி, யு.டி.என். ஜெயவீர, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலஞ்ச ஊழல் ஆணையத் தலைவர் உள்ளிட்ட 39 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற 2024 செப்டம்பர் 21 வரை, கலால் சட்டத்தின் விதிகளை மீறி பிரதிவாதிகள் பல மதுபானசாலை உரிமங்களை வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மனுதாரர்கள் மனுவை விசாரிக்கவும் அனுமதி கோரினர்.

இதற்கமைய முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், தொடர்புடைய உத்தரவைப் பிறப்பித்த உயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்க முடிவு செய்தது.

கிளிநொச்சியில் தாய் மற்றும் மகனின் மோசமான செயல்!

கிளிநொச்சி பிரதேசத்தில் குடு போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டு சூழலை பொலிசார் சோதனை இட்ட பொழுதே தாயும் மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் நிறை உடைய குடு எனும் போதைப்பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைதான தாயும் மகனும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 17,214.39 புள்ளிகளாக பதிவாகியதுடன், இது 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பதிவான முந்தைய அதிகபட்சமான 17,193.8 புள்ளியை முறியடித்துள்ளது.

இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 234.50 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு காரணமாவதுடன், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, DFCC வங்கி, சென்றல் பினேன்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு அதிக பங்களிப்பை வழங்கியது.

பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.37 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார்.

இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்றைய தினம் (3) மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 5 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

ஏற்கனவே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர்களாக முரளி மற்றும் நிலாந்தனை கட்சி தெரிவு செய்துள்ள நிலையில், இருவரில் யாருக்கு ஏனைய கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு கட்சியின் உயர்மட்ட குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அதற்கமைய கடந்த 31ஆம் திகதி தனக்கான பெரும்பான்மை ஆதரவை முரளியால் காட்ட முடியாமல்போன நிலையில், நிலாந்தன் தனக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட கிளை கூட்டத்தில் முரளிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி முரளி எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தனக்கான பெரும்பான்மை ஆதரவை எழுத்து மூலம் கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு காட்டத் தவறினால், ஏற்கனவே தனக்கான பெரும்பான்மை ஆதரவை காட்டியுள்ள நிலாந்தனை தவிசாளராக கட்சி முன்நிறுத்தும் என தீர்மானித்துள்ளனர்.

பஸ்லில் ஏற முற்ப்பட்ட முதியவர் பலி!

குருணாகலில் போதிராஜா மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.

குருணாகலில் இருந்து மெல்சிறிபுர நோக்கிப் பயணித்த பஸ்ஸில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து பஸ் சில்லுக்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த வயோதிபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு – கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபர் ஆவார்.

இது தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போகம்பர சிறைச்சாலைக் காணியை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பர சிறைச்சாலைக் காணியை 50 வருடகால குத்தகைக்கு வழங்குவதற்கான விருப்புமனுக் கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பழைய போகம்பர சிறைச்சாலைக் காணி, கண்டி மாநகரசபை அதிகார எல்லைக்கு 2021 – 2030 காலப்பகுதியை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள கண்டி மாநகரசபை அதிகார எல்லை அபிவிருத்தித்திட்ட பயன்பாட்டு சேவை வலயத்தில் அமைந்துள்ளது.

உலக மரபுரிமைக் கட்டிடங்கள் பாதுகாப்பின் கீழ் போகம்பர வளாகம் மற்றும் சிறைச்சாலைக் கட்டிடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த வளாகத்தில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணிகளுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆரம்பத் திட்டத்திற்கமைவாக நிதி, சுற்றாடல் மற்றும் சமூக ரீதியான ஆற்றல்வளங்களுடன் கூடிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த காணியை 50 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் ஹரிணியை மாற்றும் நோக்கம் இல்லை

அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தை திசை திருப்புவதற்காகவும், அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன. எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றார்.

என் பேச்சை மீறி நடந்தால், முத்து சொன்ன விஷயம் ஷாக்கான மீனா!

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் முத்து-மீனா சண்டை தான் முக்கியமான விஷயம்.

விஜயா, பார்வதி வீட்டிற்கு சென்று ரோஹினியை விவாகரத்து செய்ய வைத்து மனோஜிற்கு நீதுவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பேசுகிறார். வீட்டில் ரோஹினி, மனோஜை வெறுப்பேற்ற செய்யும் விஷயங்களை மறுபடியும் செய்கிறார்.

இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சீதா திருமணம் குறித்து பேசுகிறார்கள்.

ஒருவேளை உங்களை மீறி இந்த கல்யாணம் நடந்தால் என்ன செய்வீர்கள் என மீனா கேட்க, முத்து கோபத்தில் அப்படி எல்லாம் யோசிப்பீர்களா, திருமணம் நடந்தால் நடக்கட்டும் நான் என்ன செய்ய முடியும்.

ஆனால் கட் ஆகிவிடும், உன் குடும்பத்திற்கு நமக்குள் உள்ள உறவு இருக்காது. என்னை வெளியே அனுப்பிவிடுவீர்களா என மீனா கேட்க, அப்பா கொண்டு வந்த மருமகள், ஆனால் முத்துவின் பாசம் எதுவும் கிடைக்காது என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.

புரொமோ
வீட்டில் நடந்த சண்டையில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

அதனை பார்த்த விஜயா மீண்டும் ஆரம்பித்துவிட்டானா என கூற முத்து தனது அம்மாவை கொஞ்சி பேசுகிறார். அதனை கேட்ட விஜயாவும் எமோஷ்னல் ஆகிறார். இதோ நாளைய எபிசோடிற்கான புரொமோ,

தனது தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் விஜய் இவரை தானாம் வைத்திருக்கின்றாராம்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். இதன்பின், முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாணி தியோல், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.

விஜய்யின் கரியரில் மிகமுக்கிய படங்களில் ஒன்று துப்பாக்கி. இப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. துப்பாக்கி மட்டுமின்றி விஜய்யின் சச்சின் மற்றும் தெறி ஆகிய படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

கலைப்புலி தாணு பேச்சு

இந்த நிலையில், தளபதி விஜய் குறித்து கலைப்புலி தாணு பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதில் “நான் எத்தனையோ பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்திருக்கிறேன். எல்லா நடிகர்களையும் எனக்கு பிடிக்கும். ஆனால், என் மனதிற்கு நெருக்கமான நடிகர் யார் என்றால் அது தளபதி விஜய் தான். ஏனென்றால் யாரும் சொல்லாத ஒரு விஷயம் தளபதி விஜய் என்னை பற்றி சொல்லியிருக்கிறார். அது என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியில், தாணு சாரை என் அப்பாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் என விஜய் சொன்னார். இந்த மாதிரி யாரும் சொன்னதில்லை. அதனால் அவர் எனக்கு ஸ்பெஷல் தான்” என கூறியுள்ளார்.

பாகுபலி பிரபாஸின் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதி

பாகுபலி படத்திற்கு பின் பான் இந்தியன் ஸ்டாராக மாறி, வசூல் நாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சலார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், பிரபாஸின் ராஜா சாப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வருகிற ஜூன் 16ம் தேதி இப்படத்தின் டீசர் வெளிவரும் என அறிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ராஜா சாப் ரிலீஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.