போகம்பர சிறைச்சாலைக் காணியை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பர சிறைச்சாலைக் காணியை 50 வருடகால குத்தகைக்கு வழங்குவதற்கான விருப்புமனுக் கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பழைய போகம்பர சிறைச்சாலைக் காணி, கண்டி மாநகரசபை அதிகார எல்லைக்கு 2021 – 2030 காலப்பகுதியை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள கண்டி மாநகரசபை அதிகார எல்லை அபிவிருத்தித்திட்ட பயன்பாட்டு சேவை வலயத்தில் அமைந்துள்ளது.

உலக மரபுரிமைக் கட்டிடங்கள் பாதுகாப்பின் கீழ் போகம்பர வளாகம் மற்றும் சிறைச்சாலைக் கட்டிடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த வளாகத்தில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணிகளுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆரம்பத் திட்டத்திற்கமைவாக நிதி, சுற்றாடல் மற்றும் சமூக ரீதியான ஆற்றல்வளங்களுடன் கூடிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த காணியை 50 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.