தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். இதன்பின், முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாணி தியோல், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.
விஜய்யின் கரியரில் மிகமுக்கிய படங்களில் ஒன்று துப்பாக்கி. இப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. துப்பாக்கி மட்டுமின்றி விஜய்யின் சச்சின் மற்றும் தெறி ஆகிய படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
கலைப்புலி தாணு பேச்சு
இந்த நிலையில், தளபதி விஜய் குறித்து கலைப்புலி தாணு பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதில் “நான் எத்தனையோ பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்திருக்கிறேன். எல்லா நடிகர்களையும் எனக்கு பிடிக்கும். ஆனால், என் மனதிற்கு நெருக்கமான நடிகர் யார் என்றால் அது தளபதி விஜய் தான். ஏனென்றால் யாரும் சொல்லாத ஒரு விஷயம் தளபதி விஜய் என்னை பற்றி சொல்லியிருக்கிறார். அது என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியில், தாணு சாரை என் அப்பாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் என விஜய் சொன்னார். இந்த மாதிரி யாரும் சொன்னதில்லை. அதனால் அவர் எனக்கு ஸ்பெஷல் தான்” என கூறியுள்ளார்.