கடும் போக்கை கடைப்பிடிக்க போவதாக சம்பந்தன் எச்சரிக்கை! கால அவகாசம் கோரியுள்ள மைத்திரி, ரணில்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இனி அரசாங்கத்துடன், கடும் போக்கை கடைப்பிடிக்கப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், “காணாமல் போனவர்கள் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசும் போது கடுமையாகவே பேசுகின்றேன்.

 

எங்களுடைய மக்களுக்கு முடிவு கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். இந்நிலையில், முடிவுகளை பெற்றுத்தர சற்றுப்பொறுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போனோர் விடயம், மீள் குடியேற்ற விடயம் உள்ளிட்ட தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள கடவுளை வேண்டிக்கொள்ளுவோம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கடந்த அரசாங்கத்தில் ஏதும் நடக்கவில்லை. தற்போது சில கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

ஆனாலும், அதில் தாமதங்கள், மற்றும் குழப்பங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். அவற்றை வெற்றி கொள்ள வேண்டும்.

இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கின்றது. அவ்வாறு அவகாசம் கொடுக்காவிட்டால் அது கைவிடப்படும் விடயமாக போய்விடும்.

எனவே, இது குறித்து இறுதி முடிவை மேற்கொள்ள கடும் முயற்சிகளை எடுப்பேன் என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.