ஒரு துளி இரத்தம் சிந்தவில்லை! இலங்கையே முன்னிலை வகிக்கின்றது

தேரவாத பௌத்தத்தை முழு உலகத்திற்கும் பரப்பிய நாடுகளில் இலங்கையே முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த மாபெரும் வெசாக் வலயம் அரசின் பணத்திலோ அல்லது பொதுமக்களின் வரிப்பணத்தாலோ அமைக்கப்படவில்லை.

இது முற்றுமுழுதாக அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற பணத்தின் மூலமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானதாகும்.

அதேபோன்று பௌத்த தர்மம் இரத்தம் சிந்தியதனால் பரவியது கிடையாது. பௌத்தம் உலகம் முழுவதும் பரவியதற்கு ஒரு துளி இரத்தம் கூட சிந்தாத அகிம்சை மட்டுமே காரணம் என்பதனையும் நினைவு படுத்துகின்றேன்.

இந்த வெசாக் வலயம் இலங்கைக்கும், பௌத்தத்திற்கும் முக்கியமானதாகும். புது தொழில்நுட்பத்தோடு கூடிய ஓர் சம்பிரதாய அனுபவம் இங்கு கிடைக்கும் எனவும் பாட்டலி தெரிவித்தார்.