அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், அவரை விடுவிக்க கோரியும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்கு போட்டு டி.டி.வி. தினகரனை கைது செய்துள்ளது. லஞ்சம் எந்த அதிகாரிக்கு கொடுக்க பேசப்பட்டது என்று இன்று வரை மத்திய அரசும், சி.பி.ஐ.யும் தெரிவிக்கவில்லை.
இதில் இருந்தே இது பொய் வழக்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அவரை உடனே விடுவிக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் மூலம் அ.தி.மு.க. என்ற மாபெரும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு, ஓ.பன்னீர் செல்வம் துரோகம் செய்து விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.