முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் முகாம்களை ஒருபோதும் அகற்ற முடியாது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இதை குறிப்பட்டார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பலாலி விமானத்தளம் காணப்படுகின்ற பகுதிக்கு அண்மையில் எவ்வாறு மக்கள் மீள்குடியேற்றப்பட்டார்களோ, அதேபோன்று பிலக்குடியிருப்பு மக்களும் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இராணுவ முகாம்கள் அங்கிருந்து அகற்றப்படமாட்டாது.
இங்கு விமானப்படை முகாம் மற்றும் விமான ஓடுபாதையும் உண்டு.
பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே கேப்பாப்புலவு மற்றும் பிலக்குடியிருப்பில் மக்கள் மீளக்குடியமர்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினரிடம் வசம் இருந்த 54 பேரின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.