உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடனே நீதி கேட்டு பயணம் தொடங்குவேன்: ஓ.பன்னீர்செல்வம்

டிவி சேனல் பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது: மே 14க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நீதி கேட்டு மக்களை சந்திக்கும், எனது பயணம் தொடங்கும்.

செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அரசியல் சூழல் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும், மக்களின் எண்ணங்களுக்கு மாற்றாக பல மாற்றங்கள் நடந்துள்ளது. மக்கள்தான் ஒரு நாட்டின் எஜமானர்கள். எனவே அவர்களை சந்தித்து நீதி கேட்கும் பயணத்தை தொடங்க உள்ளேன்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றிருந்தாலும், அவர் எந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்பது, அவருக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க கூடாது என்பதே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை. இந்த கொள்கை தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி மீதும், கட்சி மீதும் மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும்.