விளையாட்டின் சிறந்த தூதர் டோனி: பயிற்சியாளர் கும்ப்ளே பாராட்டு!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில்கும்ப்ளே. மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், டோனி, வீராட்கோலி பற்றி விவரிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மகேந்திரசிங் டோனி ஜார்ஜ்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து வந்து இருக்கிறார். ராஞ்சியில் இருந்து ஒருவர் இந்திய அணிக்கு தலைமை வகிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

டோனி 10 ஆண்டாக கேப்டன் பதவியில் இருந்து இருக்கிறார்.இது மிகவும் கடினமானது.

ஒரு கேப்டனாக அவர் அணிக்கு அர்ப்பணித்துள்ள பணிக்கு தலை வணங்குகிறேன். டோனி விளையாட்டின் பொருத்தமான தூதராக விளங்குகிறார்.

அணி நெருக்கடியான நிலையில் இருக்கும்போது அவர் என்ன சிந்திக்கிறார் என்பதை யூகிக்க முடியாது. அவரது தலைமையில் 2 உலக கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்டில் நம்பர் ஒன் இடம் பெற்றது அற்புதமானது.

வீராட்கோலி பற்றி ஒரு வார்த்தையில் சொல்வது கடினம். அவர் 19 வயதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்ததில் இருந்து பார்த்து வருகிறேன்.

தற்போது அவர் தன்னை அற்புதமாக உருமாற்றி புத்திசாலிதனமாக விளங்குகிறார். அவர் நல்ல அர்ப்பணிப்பு, உந்துதல் சக்தியை பெற்று இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.