ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றுவது, அரசியல் சட்டப்படி செல்லாது என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தீவிரமானதால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பித்தது.
ஆனால் தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச்சட்டம் நிரந்தரமல்ல எனவும் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நிரந்தரச் சட்டம் கொண்டுவரும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என தமிழக மக்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் கூறியவை, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசை மத்திய அரசு அழைத்து பேசுகிறது. ஆனால், இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வருவது தேவையற்றது. அதற்கான அவசியமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் அவர், தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றுவது அரசியல் சட்டப்படி செல்லும் என்று கருதவில்லை. இருப்பினும், எந்த விஷயமாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.