தமிழ் மக்களின் வாழ்வு தொடர்பில் சிந்தியுங்கள்!

இரணியன் என்ற அசுரன் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள் தானே கடவுள் என்றும் தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்றும் அவன் விரும்பினான்.

அதற்காக தன் நாட்டு மக்கள் அனைவரும் இரணியாய நமஹ என்று உச்சாடணம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டான்.

அவனிடம் குடிகொண்ட கர்வம் தலைக்கேறி சன்னதம் ஆடினான்.கடும் தவம் செய்து சிலவரங்களை பெற்றுவிட்டே அவன் அக்கிரமம் செய்யத் தலைப்பட்டான்.

தவம் என்பது அற்புதமானது. ஞானவலிமையைத் தருவது அந்தத் தவம் அவமாகவும் போகலாம்.இரணியனைப் பொறுத்தவரை அவன் செய்த தவமும் அவன் கேட்ட வரமும் அவனுக்கு அழிவைத் தந்தன.

என்னை மனிதனோ விலங்குகளோ கொல்லக் கூடாது. நிலத்திலும் ஆகாயத்திலும் என்னுயிர் பறிக்கப்படலாகாது. வீட்டுக்குள்ளும் வெளியிலும் என்னைச் சாகடித்தல் ஆகாது. இதுவே அவன் கேட்ட வரங்கள்.

அந்த வரம் தன் உயிரை பாதுகாக்கும் என்று நம்பினான். அறம் மறந்தான்.என்ன செய்வது! தர்மம் வெல்வது நியதியாயிற்றே.

பிரகலாதன் என்பான் இரணியனுக்கு மகனாகப் பிறக்கின்றான். நாராயணக் கடவுளைத் தினமும் வழிபாடு செய்வது பிரகலாதனின் கொள்கையாயிற்று.

இரணிய நமஹ என்று நாடு முழுவதும் உச்சரிக்க வீட்டுக்குள் பெற்ற பிள்ளையோ, நமோ நாராயண நமஹ என்கிறது. எல்லாம் விதியின் விளையாட்டு.

யார் என்ன வரம் கேட்டாலும் என்ன தவம் செய்தாளும் தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் என்ற நியதி இந்த பிரபஞ்சம் இருக்கும் காலும் நடக்கும். ஆகையால் இரணியன் கொல்லப்படுகின்றான்.

அட! இது எதற்கானது என்று நீங்கள் யாரும் கேட்டுவிடலாம்.இன்றைய சூழ்நிலையில் இது நமக்கு தேவையான தத்துவம்.

அதிகாரம் இருக்கின்ற ஒவ்வொருவரும் கிடைத்த அதிகாரத்தை கொண்டு ஆட்டிப்படைக்க விரும்புகின்றனர். இஃது நமக்கு இறைவன் தந்ததென்று உணர்ந்து தர்மத்தின் வழியில் செல்ல மனம் விருப்புக்கொள்ளவில்லை.

நல்லதைச் செய்வோம், நீதிக்காகப் பாடுபடுவோம் என்ற நினைப்புக்கு இடமே இல்லாமல் போயிற்று.

சந்ர்ப்பங்களும் அதிகாரங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தவர்கள் அதை தக்கபடி பிரயோகிப்பதும் இல்லை. என்றால், மக்கள் பாவம் என்றாகிவிடும்.

எங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த நிலைமையே காணப்படுகின்றது.

அதிகாரத்தில் இருக்கும் போது செய்யக்கூடிய சேவைகளை, உதவிகளை செய்யாமல் விட்டுவிட்டு மற்றவர்கள் மீது குறைகாண தலைப்படுகிறோம். இது எந்தவகையிலும் நியாயமாகாது.

எங்கள் வடக்கு மாகாண சபையை எடுத்துப் பார்க்க வேண்டும். தேவையான விடயத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் தேவையற்ற விடயங்களில் தேவையற்ற நேரத்தை செலவிடுகின்றோம்.

தேவையற்ற வேலையை செய்வோமாயின் தேவையுள்ள வேலையை செய்ய முடியாமல் போகும்.

எனவே தேவையற்ற விடயங்களை தூக்கி ஆராய்ந்து நேரத்தை செலவிட்டால் தேவையுள்ள விடயங்கள் கிடப்பில் கிடக்கின்றன.

எங்கள் மக்களின் எதிர்காலம் அவர்களுக்கான பொருளாதார கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவை பற்றியொல்லாம் நாம் திட்டமிடவேண்டும். எங்கள் இளம் சந்ததிக்கு சரியான வழியைக் காட்டுவது அவசியம்.

இவற்றை எல்லாம் எப்போது செய்யப்போகின் றோம். ஆட்சி முடிந்த பின்பா? அல்லது அதிகாரம் பறிபோன பின்பா? இது பற்றி நம் தமிழினம் சிந்திப்பது அவசியம்.

இப்போது கூட விட்ட தவறுகளைத் திருத்தி எங்கள் மக்களுக்காக ஏதேனும் நல்லதை செய்ய முன்வாருங்கள்.

எத்தனையோ ஏழைகள் உணவுக்காக ஏங்குகின்றனர். ஏழ்மை இருக்கும் வரை உணவுப்பஞ்சம் இருக்கும். எனவே வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமை ஒழிக்கப்படுவதாயின் அதற்கான திட்டமிடல் அவசியம்.

நாங்கள் காண்பவர்கள் சந்திப்பவர்கள் வசதியானவர்கள் என்பதற்காக வறுமையோடு வாழ்பவர்கள் இல்லை என்று நினைத்து விடக்கூடாது.

எனவே யார் யாருக்கெல்லாம் சந்தர்ப்பங்கள், அதிகாரங்கள், பதவிகள், பொறுப்புக்கள் கிடைத்துள்ளனவோ அவர்கள் எல்லோரும் மக்களுக்கு சேவை செய்ய – மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும்.

இதை விடுத்து கிடைத்த அதிகாரத்தை இரணியன் போல் பயன்படுத்த நினைத்தால் அது அழிவையே தரும்.