ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்: சசிகலா பேச்சு

அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், சசிகலா பொதுச்செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது ஜெயலலிதாவின் வழியில் ராணுவ கட்டுக்கோப்போடு அ.தி.மு.க வை வழி நடத்திச்செல்வேன் என்று சசிகலா பேசினார்.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த சசிகலா திட்டமிட்டார். இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரே வெளியிட்டார். இன்று (4-ந்தேதி) முதல் வரும் 9-ந் தேதி வரை மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் கட்சி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, அ.தி.மு.க நிர்வாகிகளின் கூட்டம் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதிவி ஏற்ற பின்னர் சசிகலா கூட்டியிருக்கும் முதல் கூட்டம் என்பதால் அக்கட்சியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவியது. ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டிருந்தனர். இன்றைய கூட்டத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வடசென்னை வடக்கு, தெற்கு, தென்சென்னை வடக்கு, தெற்கு, காஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்தியம், திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலையிலேயே வந்து காத்திருந்தனர்.

மாவட்ட செயலாளர்கள் பி. வெற்றி வேல், நா. பாலகங்கா, வி.பி. கலைராஜன், வி.என்.ரவி, வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், அலெக்சாண்டர், ஆறுமுகம் ஆகியோர் வந்திருந்தனர்.

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு முன் கூட்டியே வந்தனர்.

சரியாக 10.45 மணிக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அ.தி.மு.க தலைமை கழகத்துக்கு வருகை தந்தார்.

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்க மணி ஆகியோர் சசிகலாவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் 11 மணி அளவில் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு சசிகலா தலைமை தாங்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியை வழி நடத்திச் செல்வது எப்படி என்பது பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகளுடன் சசிகலா தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா இல்லாத இந்த கால கட்டத்தில் கட்சியை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவை விமர்சனங்கள் செய்து அரசியலில் ஆதாயம் தேட சிலர் நினைக்கிறார்கள்.

அவர்களது சூழ்ச்சியை மற்றும் சூட்சுமத்தை நாம் ஒன்று பட்டு முறியடிக்க வேண்டும்.

ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காக்க வேண்டும். மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடவேண்டும்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நினைவாக தபால் தலைகளை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்துவோம். எம்.ஜி.ஆரின் உருவம் பதித்த நாணயத்தையும் வெளியிட முயற்சி மேற்கொள்வோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தெருமுனை கூட்டங்களை நடத்தவேண்டும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும்.

விளையாட்டு போட்டிகளையும், பேச்சு போட்டிகளையும் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவேன்.

இளம்பெண்கள் பாசறையில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கட்சியை கட்டுகோப்புடன் கொண்டு செல்ல அனைவரும் சிறப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சசிகலாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

பிற்பகலில், திருவள்ளூர் மேற்கு, வேலூர்மேற்கு, கிழக்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து 9-ந்தேதி வரை மாவட்ட நிர்வாகிகளுடன் தினமும் சசிகலா ஆலோசனை நடத்துகிறார். 50 மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்த உள்ளார்.