பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இன்று தி.மு.க.வின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்னெடுங்காலமாக கட்சியின் அடிமட்ட அளவில் இருந்து உழைத்து இன்று தலைவராக உயர்ந்தமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
சென்னை மாநகராட்சி மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் பணி பாராட்டுக்குரியது, சிறப்புக்குரியது.
டாக்டர் கலைஞர் அவர்களின் ஆசியோடு இன்று மு.க.ஸ்டாலின் ஏற்றிருக்கும் பொறுப்பில் – தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலே சிறப்பாக செயல்படுவார்கள். மு.க.ஸ்டாலின் கழகப் பணி, மக்கள் பணி தொடர, வளர, சிறக்க த.மா.கா. சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கிறேன்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்:-
தமிழ்நாடு எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வு இப்போது நிகழ்ந்திருக்கிறது. அதை வரவேற்று வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
ச.ம.க. நிறுவனர் – தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-
இன்று காலை நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் கட்சியின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மு.க.ஸ்டாலின் செயல் தலைவருக்கு பொருத்தமானவர் என்பதில் ஐயமில்லை.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-
தங்களின் சீரிய தலைமையின் கீழ் சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் நலன், தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவை மேலோங்க திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்படும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கழகத்தின் செயல் தலைவராக தாங்கள் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கின்றேன்.