இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தின் திரிக்ககரா எனும் இடத்தில் திருநங்கைகளுக்கான தனிப்பள்ளி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சஹாஜ் இண்டர்நேஷனல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பள்ளியை திருநங்கைகளுக்கான செயற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் நடிகை கல்கி சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.
தேசிய திறந்தநிலை கல்வி மையத்துடன் (National Institute of Open Schooling) இந்தப் பள்ளி இணைந்து செயல்படும் எனவும், திருநங்கைகள் படிப்பை பாதியில் கைவிடுவதை குறைப்பதற்காக தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பள்ளியில் பயிலுபவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக எழுத முடியும்.
மேலும் இங்கு தையற்கலை, இயற்கை வேளாண்மை, ஆளுமைத் திறன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய கல்கி சுப்பிரமணியம் “ இந்நாள் என் வாழ்வில் சிறந்த நாள், இப்பள்ளி திருநங்கைகள் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். கல்வியால் மட்டுமே திருநங்கைகள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, அறிவு ஆகியவற்றை தர முடியும் என்பதால் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற பல பள்ளிகளை தொடங்க முன்வர வேண்டும்’ எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், திரிக்ககரா சட்டசபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.