செயல்தலைவர் பொறுப்பை கனத்த இதயத்துடன் ஏற்கிறேன்: ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

தலைவர் கலைஞர் மேடைக்கு வர முடியாத நிலையில் அவர் இல்லாமல் இந்த பொதுக்குழு நடைபெறுவதாக பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். தலைவர் வர இயலாமல் முதல் முறையாக பொதுக்குழு நடைபெறுகிறது.

செயல் தலைவர் பதவி என்பது திடீரென்று எடுத்த முடிவு அல்ல. பல கட்டங்களாக தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்கள் கலந்து பேசி ஆலோசித்து நன்கு சிந்தித்து எடுத்த முடிவு இது.

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கும் தலைவர் கலைஞருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் ஓய்வு எடுத்து நன்றாக உடல் நலம் தேற வேண்டும்.

அதனால்தான் என்னை செயல்தலைவராக பொறுப்பேற்கும்படி வற்புறுத்தி வந்தீர்கள். அந்த வகையில் உங்கள் பேராதரவுடன் செயல் தலைவர் பொறுப்பை ஏற்று இருக்கிறேன்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த இயக்கத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவருக்கு மகனாகப் பிறந்து அவர் ஆற்றிய பணிகளை பார்த்து அவரை பார்க்க வரும் கழக முன்னோடிகளை பார்த்து என்னை அறியாமலேயே எனக்கு ஆசை ஏற்பட்டது.

சிறு வயதில் உதய சூரியனுக்கு ஓட்டு போட சொல்லி பிரசாரம் செய்து எனது அரசியல் பணி தொடங்கியது. அப்படி தொடங்கிய பணி இளைஞர் மன்றமாக உருவெடுத்து இளைஞர் தி.மு.க.வாக மாறி பின்னர் இளைஞர் அணி ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் வட்ட பிரதிநிதியாக நான் தேர்தலில் நின்று பொறுப்பேற்றேன். பின்னர் அதிலிருந்து வளர்ந்து வட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

பின்னர் பகுதி பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக போட்டியிட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த பொறுப்புகளுக்கு வந்தேன். அதன் பிறகு பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக ஆனேன்.

1980-ம் ஆண்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞர் அணி அமைப்பு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் உள்ள 6 பேரில் நானும் ஒரு உறுப்பினர். பின்னர் இளைஞர் அணி அமைப்பாளராக, இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று துணை பொதுச்செயலாளராகி, கழக பொருளாளர் என்ற நிலைக்கு வந்தேன்.

ஒவ்வொரு பொறுப்புக்கு வரும் போதும் நான் அளவிட முடியாத அளவுக்கு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இன்று அந்த நிலை இல்லை. அதுதான் உண்மை.

இன்று கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் செயல் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பொறுப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மாறாக கனத்த இதயத்துடன் உங்கள் ஆதரவுடன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். என்னால் அதிகம் பேச முடியவில்லை.

செயல் தலைவர் என்ற முறையில் தலைவர் கலைஞருக்கு துணையாக இருந்து முறையாக என் பணிகளை ஆற்றுவேன். கழக முன்னோடிகள் காட்டிய வழியில் சென்று ஏற்ற பணியை சிறப்புடன் ஆற்ற தயாராக உள்ளேன்.

சென்னை மேயராக நான் பொறுப்பு ஏற்ற போது கலைஞர் என்னிடம் சொன்னார். மேயர் என்பது பதவி அல்ல பொறுப்பு. பொறுப்போடு கடமையாற்ற வேண்டும் என்றார்.

எனவே செயல் தலைவர் என்பதை பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதி பொறுப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி ஏற்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.