இன்று 91-வது பிறந்தநாள்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி புகழாரம்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ‘என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடணப்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது.

திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.

தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.

2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு நாட்டிலேயே மிகவும் உயரியதான ’பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

மரபுகளை எல்லாம் கடந்த வகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் இன்று வாஜ்பாய் தனது 91-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘நமது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அடல்-ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது தன்னிகரற்ற சேவையும், தலைமையும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக திகழ்ந்துள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன், நீண்டகாலம் அவர் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்’ என்று தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, கூட்டத்தில் இருக்கும் ஒரு பா.ஜ.க. நிர்வாகியை அடையாளம் கண்ட அவர், அந்த நிர்வாகியின் தோளில் பாசமாக தட்டி, கட்டித்தழுவும் காட்சி கொண்ட ஒரு பழைய வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ’இந்த எளிமையும், அரவணைப்பும்தான் அடல்-ஜியை நாம் போற்றிக் கொண்டாட காரணம்’ என்றும் புகழராம சூட்டியுள்ளார்.