கருவில் திருநங்கைகள் உருவாக இதுவா காரணம்?

மானிட சரீரம் எப்படி உண்டாகிறது என விநதா புத்திரனின் கேள்விக்கு ஸ்ரீமத் நாராயணன் கூறிய பதில் இதோ,

ஆணும் பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்வதால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.

பெண்ணின் மாதவிலக்கு ஆனதிலிருந்து, 6வது நாள் முதல் 18வது நாள் வரையிலான இரட்டை நாட்களில் ஸ்தீரியுடன் கூடினால் ஆண்மகவு பிறக்கும்.

பொதுவாக ஒரு பெண் மாதவிலக்கான நான்காம் நாளிலிருந்து எட்டாம் நாள் வரை கருவுற வாய்ப்புண்டு.

மாதவிலக்கான 5 ஆம் நாள் முதல் பெண்கள் பாயசம் முதலிய பதார்த்தங்களை உண்ண வேண்டும். காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் குவிந்த சித்தத்தில் ஒன்று சேர்ந்தால் சுக்கில சுரோணிதக் கலப்பால் கருத்தரிக்கும் குழந்தை வளர்பிறை சந்திரனைப்போல் விருத்தியாகும்.

ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண் பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண் பிள்ளையும் பிறக்கிறது. சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏறக்குறைவில்லாமல் சமமாயின் குழந்தை திருநங்கையாக இருக்கும்.

சேர்க்கை நிகழ்ந்த 5 வது நாளன்று கர்ப்பப்பையினுள் ஒரு குமிழியுண்டாகும். 14 ஆம் நாளில் தசையால் சிறிது பெரிதாகும். 20 வது நாளில் மேலும் சிறிது தசை உண்டாகும். 25 வது நாளில் மேலும் கொஞ்சம் புஷ்டியாகி, ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

4 மற்றும் 5 வது மாதத்தில் காது, மூக்கு மற்றும் மார்பு உண்டாகும். 7வது மாதத்தில் ஆண்குழந்தை என்றால் ஆண் இனக்குரியும், பெண் குழந்தை என்றால் பெண் இனக்குறியும் உண்டாகும்.

8 வது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசு அடைகிறது, 10 மாதத்தில் தன் பிஞ்சுக்கால்களால் உதைத்து உதைத்து கருவறைக் கதவை திறப்பதால் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அன்னையில் கருவில் இருக்கும்போதே, உயிருக்கு ஆயுள் கல்வி யோகம் ஆகியவைகள் எந்த நேரத்தில் எந்தவிதமாக இறப்பு நேரிடும் என்பதும், முன் ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப கர்ம வினைகளும் எழுதப்பட்டு விடுகிறது.

பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின்பயனையே ஜீவன் மறுபிறவியில் அனுபவிக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

கருடபுராணம்.