கோவில் வெளியே அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டுமா?

கோவிலுக்கு நாம் போகும்போது பகவானை நினைத்துக்கொண்டு போகிறோம். திரும்பி வரும்போதும் பகவானை நினைத்துக் கொண்டுதான் வருகிறோம். தர்மம் எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். நமக்கு வசதி இருக்கும்போது பண்ணலாம். கோவில் வாசலில் இருப்பவர்களுக்குத்தான் தர்மம் பண்ண வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வீடு தேடி வருபவர்களுக்கும் பண்ணலாம்.

கோவிலுக்குப் போவதற்கும் அங்கே உட்கார்ந்து இருப்பவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், கோவில் வாசலில் ஒரு கும்பல் தர்மத்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதே நமது கலாசாரத்துக்குப் புறம்பான ஒரு விஷயம். அது நமது சமுதாயத்துக்கே குறை. நமது வீட்டு வாசலுக்கு வந்து கேட்பவரிடம் ‘‘போட்டாச்சு, போ!’’ என்று சொல்லும் தைரியம் நமக்கு உண்டு. ஆனால், கடவுளைக் கும்பிட்டு வரும்போது ‘இல்லை’ என்று சொல்ல நாம் தயங்குவோம்.

இந்த பலகீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபார யுக்திதான் கோவில் வாசலில் பிச்சைக்கு உட்காருவது. கோவிலில் கொடுப்பது மனமுவந்து கொடுக்கிற தர்மமே இல்லை. தர்மம் என்பதை வீட்டிலேயே செய்ய வேண்டும். இதில் முன்னாடி கொடுப்பதா, பின்னால் கொடுப்பதா என்கிற குழப்பத்துக்கு இடமே இல்லை.!