கொழும்பில் பணியாற்றும் அரச பணியாளர்களின் கவனத்திற்கு!

கொழும்பில் அடுத்த மாதம் முதல் அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மையான வேலை நேரக்கொள்கை அமுல் செய்யப்படவுள்ளது.

மேல்மாகாண பாரிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் முதல், இந்த திட்டம் பரீட்சார்த்த ரீதியில் அமுல் செய்யப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்ல பகுதியில் நிரந்தரமாக அமுல் செய்யப்படவுள்ளது.

கொழும்பின் பாரிய வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு அமைய அரச சேவையில் உள்ளவர்கள், காலை 7 மணியில் இருந்து 10 மணிவரைக்குள் கடமைகளுக்கு அழைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரையில் பணிகளை முடிக்கமுடியும்.

தற்போது அரச சேவையாளர்களின் பணிநேரம் காலை 8.30 முதல் மாலை 4.30 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும் பணியாளர்கள் முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கருமங்களை ஆற்ற வேண்டும் என்று கேட்கப்படுவார்கள்.

இந்தமுறையை கடைப்பிடிக்கும் வகையில் தனியார்துறையினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கொழும்பின் அரச பணிமனை மையங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 350,000 பேர் பயணம் செய்கின்றனர்.