தோஷங்களை போக்கும் வில்வமரம்

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ மரம் இருப்பதை காண முடியும். அதனை தரிசித்து வந்தாலே வாழ்வில் உண்டாகும் பெரும் துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் அதே வில்வ மரத்தை நாமே வளர்த்தோம் என்றால், நாம் செய்த பாவங்கள், நாம் பெற்ற சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து. இதுபற்றி பார்ப்போம்.

. வில்வ விதைகளை நல்ல சுப நாளில் வாங்கி, அதை ஒரு மண் தொட்டியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். உரமாக நீரில் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வேண்டும். இதையடுத்து சில நாட்களில் வில்வ கன்று விதையில் இருந்து துளிர்க்கும்.

விதையை நட்டதில் இருந்து சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை தினமும் ஜெபித்து வர வேண்டும். வில்வ மரம் ஒரு அடி வளர்ந்ததும் அவரவருக்குரிய ஜென்ம நட்சத்திர நாளில், ஏதாவது ஒரு சிவன் கோவிலில் அந்த வில்வக் கன்றை நட்டு வைத்து, நன்கு பராமரிக்க ஆட்களை நியமிக்கலாம். வில்வ மரம் 6 அடிக்கு மேல் வளர்ந்து விட்டால் அது தானாகவே தழைக்கும்.

நாம் வளர்த்த மரத்தின் இலைகளைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், அனைத்து தீயபலன்களும் விலகும். தலைமுறை தாண்டிய சாபமும், பாவமும் நீங்கும்.

சிவன் கோவில்களில் வில்வ கன்றை வைக்க முடியாவிட்டால், கோவில் அருகில் வைத்து வளர்க்கலாம். வில்வ மரத்தை வலம் வருவது, மகாலட்சுமியை வலம் வருவதற்கு நிகரானது.