பாகுபலி படத்தில் ‘கட்டப்பா’வாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் தேர்வுசெய்யப்படவில்லை என்ற தகவல் தற்போது இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஸ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது பாகுபலி படத்தின் முதல் பாகம்.

கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் நடிகர் சத்யராஜ். படத்தின் இறுதியில் கட்டப்பா பாகுபலியை குத்தி கொலை செய்வதுபோல் முடிக்கப்பட்டிருக்கும்.

இதனால் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியும், மீதான ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இதற்காகவே படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம்.

அதேபோல் படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கட்டப்பா கதாபாத்திரத்துக்கு முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை தான் ராஜமவுலி முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் சஞ்சய்தத் அந்நேரம் மும்பை சிறையில் இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை எனவும், அதன்பிறகே சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டார் எனவும் விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், கட்டப்பா கதாபாத்திரத்தில் சஞ்சய்தத் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு பெயர் வாங்கி இருப்பாரா என்று தெரியவில்லை, சத்யராஜ் அந்த கேரக்டரில் அவ்வளவு அருமையாக நடித்திருந்தார் எனவும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.