தோப்பூர் சந்தியில் சாரதி தூங்கியதால் வைத்தியசாலையில்!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சந்தியில், டிப்பர் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பமொன்றில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09) அதிகாலை 04 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சாரதியொருவரே காயங்களுக்குள்ளாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூரிலிருந்து கங்கைப் பகுதிக்கு மணல் ஏற்றச் சென்ற குறித்த டிப்பர் வாகனம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் வேகக் கட்டுப்பாட்டையும் மீறி மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை- கண்டி பிரதான வீதியின் 97ஆம் சந்திப் பகுதியில் பொலன்னறுவை நோக்கி மணல் ஏற்றிச்சென்ற டிப்பரொன்றும் இன்று அதிகாலை குடைசாய்ந்துள்ளது விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே இந்த விபத்துக்குப் பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறிய முடிகின்றதென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த டிப்பர் வீதி அருகாமையிலுள்ள வயல் நிலத்தினுள் குடை சாய்ந்துள்ளது.