பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் : கோட்டாபய!

பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

சபையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கள கீதம் இசைத்தனர்.

இதன்பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,

“அடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் நாடாளுமன்றம் எவ்விதத்திலும் நாட்டுக்கு ஒவ்வாது. ஒரு ஸ்தீரத்தன்மையுடைய மக்களுக்குப்பொறுப்புக்கூறக்கூடிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும். நாட்டின் அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியமாகிறது.

இனவாத அரசியலுக்கு நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் நான் ஜனாதிபதியென்ற ரீதியில் உறுதி செய்வேன்.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுப்பிரிவு முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும்.

மக்கள் நலன் திட்டங்கள் குறித்து நான் நேரடியாக கண்காணிப்பேன். அத்துடன் நாட்டில் வறுமையொழிப்பு என்பது எனது ஆட்சியில் மற்றுமொரு இலக்காகக் காணப்படுகின்றது.

ஊழல் மோசடிக்ளுக்கு எதிராக எனது ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகநகர் திட்டங்கள் அனைத்துமே தெற்காசியாவின் கேந்திரநிலையமாக இலங்கையை கொண்டுவருவதற்கான இலக்காகவே அமையப்பெற்றுள்ளன.

அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியம். 1978 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 19 தடவைகள் அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அரசியல் அமைப்பில் ஒரு ஸ்திரமற்ற தன்மை காணப்படுகின்றமையால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் . ஆகவே அரசியலமைப்பில் கட்டாய திருத்தங்கள் செய்யப்படவேண்ம் . மறுபுறம் தேர்தல் மறைமையிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது” என்றார்.

இதேவேளை, நாடாளுமன்றம் இன்றைய அமர்வுகளுக்காக பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

என்னுடன் ஒன்று சேருங்கள்! உங்களை அழைக்கிறேன்- ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

இன்று அநேகமான நாடுகள் அரசதுறையின் வினைத்திறமையை உயர்த்துவதற்காகத் தொழில்நுட்பத்தை தீர்வொன்றாக பயன்படுத்தியுள்ளனர். அதனூடாக அனைவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்க முடியும். அதனால் அரச நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பரவலாக்குவதன்பால் நாங்கள் விசேட கவனத்தைச் செலுத்துகின்றோம்.

எமது நாட்டின் பூகோள ரீதியிலான அமைவு, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டியுள்ளது. இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையானது கிரேக்கம், ரோம், அரேபியா, சீனா உள்ளிட்ட பல்லின வியாபாரிகள் வருகின்ற சர்வதேச வியாபார நிலையமாகவிருந்தது. இலங்கை அவ்வாறு உலகில் பிரபல்யமாவதற்கு முக்கிய காரணமானது கீழைத்தேய மற்றும் மேலைத்தேய இணைப்பை ஏற்படுத்தும் கடல்பாதையில் மிக முக்கியமானதொரு இடத்தில் எமது நாடான இலங்கை அமைந்திருத்தலாகும். இன்றும் நாம் அச்சலுகையை அவ்வாறே பெற்றுக்கொள்ள முடியுமாகவுள்ளது.

2005 – 2014 இடைப்பட்ட காலத்தில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை தென் ஆசியாவின் பொருளாதார மையமாக முன்னேற்றுவதற்கு திட்டம் வகுத்தது. மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகமானது தென் மாகாணத்தின் மாபெரும் தொழில்நுட்ப நகரத்தினைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே தெரிவு செய்யப்பட்டது.

இலங்கையை ஆசியாவில் நிதிசார் மற்றும் வர்த்தக மையமாக உருவாக்குவதற்காகவே கொழும்பு துறைமுக நகரத்தை கட்டியெழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. நீண்டகால நோக்கங்களுடன் திட்டமிடப்பட்ட அக்கருத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

நாங்கள் செவ்வையான ஒரு திட்டத்தின்படி செயற்பட்டால் பிராந்திய அயல் நாடுகளுக்குப் பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற பல்வேறு சர்வதேச வியாபாரங்களை இலங்கையில் நிலைப்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அம்முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் தேவையான சகல வசதிகளையும் துரிதமாக வழங்குவதற்காகவும் நாங்கள் தயாராகவிருத்தல் வேண்டும்.

அதிவேகப் பாதைத் தொகுதிகளைப்போன்று நெடுஞ்சாலைத் தொகுதிகளை முன்னேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தி நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் இன்னுமொரு இடத்திற்குச் சில மணித்தியாலயங்களினுள் பயணிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துதல் பொருளாதார அபிவிருத்திக்கு மிக முக்கியமானது. புகையிரதச் சேவையை மேம்படுத்துதலும் இவ்வேலைத்திட்டத்தின் அவசியமானதொரு பிரிவாகும்.

வினைத்திறன்மிக்க அத்துடன் சொகுசு முறையிலான புகையிரதச் சேவையின் மூலம் இன்று பாரியதொரு பிரச்சினையாக நிலவுகின்ற வீதி நெருக்கடிக்கான தீர்வுகளைக் காண முடியும். நகரமயமாக்கல் ஒரு நாட்டிற்கு நன்மையைப்போன்று தீமையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

அபிவிருத்தி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக எமக்கு மீள் நகரமய வேலைத்திட்டமொன்று தேவைப்படுகிறது. இதனூடாக நகரப்புற நெருக்கடியைக் குறைப்பதற்கும், சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கும், அதேபோன்று வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கும் எமக்கு வசதி கிடைக்கிறது.

இலங்கைபூராகவும் பரந்திருக்கும் மக்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகள், சுகாதாரச் சேவைகள் மற்றும் தொழில்கள் என்பவற்றை நடாத்திச் செல்வதற்காக தமது பிரதேசத்தினுள் வேண்டிய வசதிகள் இருக்க வேண்டும். வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைத் தொகுதிகளின் முன்னேற்றத்தைப்போன்று நாடு முழுவதிலும் அதிவேக சர்வதேச வலையமைப்பு வசதிகள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் என்பவற்றை இதற்காக வழங்குதல் முக்கியமாகிறது.

பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டின்போது மின்சார விலைகள் முக்கிய காரணியாகும். குறிப்பாக பொருளாதாரத்துறைகளுக்கு முதலீட்டாளர்களை வரவழைக்கும்போது இது அழுத்தம் செலுத்துகின்றது. நியாயமான விலைக்கு வலுசக்தியை உற்பத்தி செய்வதற்காக எமக்குக் குறுகியகால அத்துடன் நீண்டகாலத் தீர்வுகள் தேவைப்படுகிறது. நீண்டகாலத் தீர்வுகளைத் தேடும்போது சூரிய சக்தி, காற்றின் சக்தி, நீர் மின்சாரம் போன்ற சுற்றாடல் நேயமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய மூலங்களின்பால் முக்கிய கவனம் செலுத்துவது எமது கொள்கையாகும்.

எமது நாடு இரத்தினக்கற்கள் மற்றும் கனிய வளங்கள் நிறைந்த நாடாகவிருப்பினும் அவற்றின் பெறுமதியை அதிகரிக்கும் தொழில்கள் இற்றைவரைக்கும் சர்வதேச ரீதியில் முன்னேற்றமடையவில்லை. பெறுமதியை அதிகரிக்காது இத்தகைய இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகளவிலான அந்நியச் செலாவணியை வருடாந்தம் இழக்க நேரிடுகிறது.

இலங்கையில் மட்டுமன்றி ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலிருந்துகூட கொண்டுவரப்படும் இரத்தினக்கற்களின் பெறுமதியை அதிகரித்து விற்பனை செய்யக்கூடிய சர்வதேச ரீதியிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொகுதியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல்கள் மற்றும் புவிச்சரிதவியல் அளவைகளுக்காக புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டுமென்பதுடன், இலங்கையின் கனிய வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கும் கைத்தொழில்களுக்கான முதலீடுகளுக்கு விசேட சலுகைகளை வழங்கி அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

பல்வேறு சட்டதிட்டங்கள், அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றின்மீதான தடைகளின் மூலம் இலங்கையின் பாரம்பரிய வாழ்வாதாரங்களாகிய இரத்தினக் கல் தொழில், ஓட்டுக் கைத்தொழில், செங்கல் கைத்தொழில், தச்சு வேலை மற்றும் கைத்தொழில்கள் போன்ற துறைகளுக்காக அநாவசியமான அத்துடன் அநீதியான வரையறைகளை விதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையேற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

எதிர்காலத்தைத் திட்டமிடும்போது கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் முதலியன தொடர்பாகத் தற்போது இருப்பதைவிட முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்ததொரு காலநிலை இருக்கின்ற அத்துடன் அதிவிசாலமான கடல்சார் பொருளாதார வலயத்திற்கு உரித்துடைய நாடென்ற ரீதியில் நம்மால் இத்தொழிலை இதை விட மிகவும் முன்னேற்ற முடியும்.

சரக்குப் பொருட்கள், பழவகைகள், மரக்கறி வகைகள், தானியங்கள், மாமிசம் மற்றும் மீன் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய கமத்தொழில் உற்பத்திகள் பல இருக்கும்போது இதைவிட ஏற்றுமதி வருமானத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் வாழும் மக்களின் 1/3 பங்கினர் கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் என்பவற்றின்மீது வாழ்கின்றனர். நாங்கள் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

இத்தொழில்களை முன்னேற்றுவதற்காகப் பாரம்பரிய செய்கை முறைகளுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது. அதேபோன்று நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை நோக்காகக்கொண்ட கமத்தொழிலுக்காகச் சேதனப் பசளைப் பயன்பாட்டை பரவலாக்குதலும் எமது கொள்கையில் ஒரு பகுதியாகும். எதிர்வரும் தசாப்தத்தில் இலங்கையில் கமத்தொழிலை முற்றுமுழுதாகச் சேதனப் பசளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும். உள்ளூர் ரீதியாக சேதனப் பசளை உற்பத்தியை விருத்தி செய்யும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்குகின்றது.

கமத்தொழில் உற்பத்திகளை வரையறையின்றி மீள் ஏற்றுமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால் சிறிய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் செயற்பட்டது. கமத்தொழில் உற்பத்திகளை மீள் ஏற்றுமதி செய்வதை முற்றும் முழுதாக நிறுத்துவதற்கு தற்போது பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடல்சார் பொருளாதாரம் தொடர்பாகவும் இதைவிடக் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கடற்றொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக முறையானதொரு வேலைத்திட்டமொன்றை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். ஆழ்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகச் சகல கடற்றொழில் துறைமுகங்களை நவீனமயப்படுத்துவதுடன், தேவைகளுக்கேற்ப புதிதாக துறைமுகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்நீர் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுதலும், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதலும் எமது திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்காலச் சந்ததியினர் சார்பில் சூழலைப் பாதுகாத்தல் எமது அடிப்படைப் பொறுப்பாகும். அரச கொள்கைகளைத் தயாரிக்கும்போதும், செயற்படுத்தும்போதும் சூழல் பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் முக்கிய கவனத்தைச் செலுத்துவோம்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றும் போது உலகில் முன்னணியில் திகழ்கின்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஒரு நாடென்ற வகையில் எமக்குள்ள மிகப் பெறுமதியான வளமானது எமது எதிர்காலச் சந்ததியாகும். அதனால் மனிதவள அபிவிருத்தியை எமது அரசாங்கத்தின் முக்கியமானதொரு பொறுப்பு என நாங்கள் இனமறிந்துள்ளோம்.

நாட்டின் எதிர்காலச் சந்ததியைப் பயன்மிகுந்த பிரஜைகளாக்குவதற்குத் தேவையான அறிவினால் அவர்களைப் போஷிப்பதற்கும், அவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவங்களை விருத்தி செய்வதன்பால் முக்கிய கவனம் செலுத்துவதற்கும் எமக்கு நேர்ந்துள்ளது. இளைஞர் யுவதிகளை வழிதவறவிடாது அவர்களுக்காக உயர்கல்விக்கும், தொழில்நுட்ப கல்விக்குமுள்ள வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும். இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மிகக் குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்ப வேண்டும். அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும், அரசாங்கத்தின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இயலளவுகளை வினைத்திறமையாக பயன்படுத்துவதன் வாயிலாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும்

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.இன்று பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்ற சில பாடநெறிகள் தொழிற்சந்தைக்கு ஏற்றவாறாக அமைவதில்லை. தற்கால தொழிற்சந்தை தேவைகளுக்காக எமது பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு தற்போது கற்கும் பாடநெறிகளுக்கு மேலதிகமாக அவர்கள் தன்னிச்சையாக பங்குபற்றக் கூடிய குறுகிய கால மேலதிக பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மாணவர்களை அனுமதிக்கும் போதும் அதேபோன்று சந்தை தேவைகளை இலக்கிட்டு பாடநெறிகளைத் திருத்தும் போதும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கும் கூடிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

நாட்டில் தற்போது உள்ள டிப்ளோமா மட்ட பாடநெறிகளை நடத்தும் நிறுவனங்களை முறையே பட்டமளிக்கும் தரத்திற்கு உயர்த்துவது அவசியமாகும். இதற்கான ஆரம்பமாக எமது ஆசிரியர் பயிற்சி பாடசாலைகள் மற்றும் தாதியர் பயிற்சி பாடசாலைகள் என்பவற்றை பட்டமளிப்பு தரத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையானது தற்போது கல்வித்துறையினுள் பிரச்சினையாகவுள்ளது.

அதேபோன்று தாதியர்களுக்காக தற்போது வழங்கப்படும் மூன்று வருடகால டிப்ளோமாவை நான்கு வருடகால பட்டப் படிப்பு வரை உயர்த்துவதன் மூலமும், அவர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதன் மூலமும் அவர்களுக்கு சர்வதேச தர அளவுகளின் கீழ் வெளிநாடுகளிலும் கூட சேவையாற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் சித்தி பெறாதவர்களும், சாதாரண தரம் வரை கற்றுக் கொண்டவர்களுமான மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவியல் பிரிவின் அறிவினை விருத்தி செய்து கொள்வதற்காக இயந்திரவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரித் தொகுதியை வலுப்படுத்த வேண்டும். குறித்த நிறுவனங்களுக்காக வழங்கப்படும் ஒதுக்கீடுகளையும் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். இதனூடாக சர்வதேச ரீதியில் தொழில்பயிற்சி பெற்ற ஊழியப்படையை உருவாக்க முடியுமானதுடன், உள்நாடு போன்று வெளிநாட்டுச் தொழிற்சந்தையிலும் உயர்ந்த சம்பளத்தைப் பெறக் கூடிய தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்க முடிகிறது.

தொழிற்துறையினுள் ஆங்கில அறிவு போதாமை பெருமளவிலான இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்புக்களை இழக்கச் செய்கிறது. இதனால் இலங்கையின் ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கிலமொழியைக் கற்பிப்பதற்கான வசதிகளை முன்னேற்றுவதற்கும் அதற்குத் தேவையான ஆசிரியர்களை இணைப்புச் செய்வதற்கும் விசேட திறமுறையொன்றை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.

இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பதற்காக எமது வெளிநாட்டு தூதரகங்களுக்கு முக்கிய பொறுப்புக்களை கையளிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்படாத ஊழியர்கள் அநேகமானோரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக ஒவ்வொரு துறையிலும் பயிற்சிபெற்ற ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் எமது நாட்டிற்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்கும் சர்வதேச தொழிற்சந்தையினுள் எமது நாட்டின் பிரதிமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் முடிகிறது.

கல்வித்துறையானது ஒரு நாட்டிற்கு சிறந்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்குரிய வழியாகும். இலங்கைப் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையானோர் இன்று ஆசிய உயர்கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொண்டு இருக்கின்றனர். கல்விக்காக எமது பிள்ளைகளை அதி கூடிய பணச் செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கையின்பால் கவரச் செய்யும் விதத்திலான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சர்வதேச ரீதியில் தமது

தரப்படுத்துகைகளிலிருந்து மேலுயர்வதற்காக குறுகிய கால அத்துடன் நீண்டகால திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எமது நாடு முன்னேற்றமடைந்து வரும் நாடாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் உண்மையிலேயே இதிலிருந்து மீண்டு முன்னேறிய நாடாக வேண்டுமாயின் அதற்காக உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல் வேண்டும்.

5 பில்லியனுக்கும் கூடிய மக்கள் வாழ்கின்ற ஆசியாவினுள் இன்று மாபெரும் பொருளாதார மலர்ச்சி ஏற்பட்டு உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பணம் செலவழிக்கும் ஆற்றலுள்ள மத்திய வகுப்பின் சமுதாயம் கடுகதியாக விருத்தியடைவது இவ்வலயத்திற்குள்ளேயாகும். ஆகையால் எமது உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் ஆசிய பிராந்தியத்தினுள் புதிய சந்தைகளைத் தேடிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

21 ஆவது நூற்றாண்டானது அறிவை மையமாகக் கொண்ட நூற்றாண்டாக அழைக்கப்படுகிறது. செயற்கை புத்திக்கூர்மை (Artificial Intelligence) , உயிரினத் தொழில்நுட்பம் (biotechnology), ரொபோ விஞ்ஞானம் (robotics), 3D அச்சீடு, IOT உதிரிப்பாகங்கள் (Internet of Things) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் உலகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னேற்றமடைகின்ற பல நாடுகள் இவ்யதார்த்தத்தைப் புரிந்துள்ளன. தொழில்நுட்ப மைய முதலீடுகளுக்காக அவர்கள் பெரும் பணத்தைச் செலவு செய்கின்றனர்.

எமது முதலீட்டுக் கொள்கையை முகாமை செய்யும் போது நாங்கள் இதன்பால் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக எமக்கு எந்த வகையான முதலீடுகள் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கமைய நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்ற முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி நாங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

எமது இளம் சந்ததியை புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதற்கும் அவற்றிற்குரிய ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் ஈடுபடுத்துவது மிக முக்கியமாகும். அதற்காக தாமதிக்காமல் துரிதமாக தயாராவதற்கு நாங்கள் கல்வித்துறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோன்று இளம் சந்ததியினருள் ஆங்கில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமக்கான சந்தை வாய்ப்புக்கள் இருப்பது தொழில்நுட்பத்துறைகளில் மட்டுமல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தில் எம்மால் இலகுவாக முன்னேற்றக் கூடிய மற்றுமொரு துறையாவது சுற்றுலாத்துறை கைத்தொழிலாகும். 2018 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறைக் கைத்தொழிலானது இன்னும் பல ஆண்டுகளினுள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாறுவதற்கு அவகாசம் உள்ளது. இதற்காக மிக முறையானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

ஜனநாயகத்தின் உச்சக்கட்ட பயனை அடைவதாயின் அரச நிருவாகத்தையும் உரியவாறு செயற்படுத்த வேண்டும். அரச நிறுவனங்களை இலாபகரமாக அத்துடன் வினைத்திறமையாக நிருவகிப்பதற்காக உயர் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களைத் தெரிவு செய்யும் போது உரிய துறையின் அறிவும் பொறுப்பை வகிப்பதற்கான தகைமையும் கொண்டுள்ளவர்களை நியமிப்பதாக நாங்கள் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டோம். அதற்கமைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின் அரச நிறுவனங்களை நிருவகிப்பதற்காக பொருத்தமானவர்களைப் பரிந்துரைப்பதற்கு நாங்கள் குழுவொன்றைத் தாபித்துள்ளோம்.

2004 – 2014 இடைப்பட்ட காலத்தினுள் நாங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் துரிதமான அபிவிருத்தி ஏற்படும் விதத்தைக் கண்டோம். வீதித் தொகுதி, வீடமைப்பு, மின்சாரம், நீர், தொடர்பாடல் வசதிகளைப் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளிலும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவம், நகர அலங்கரிப்பு போன்ற துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் நிகழ்ந்தது. திறமையான நிருவாகத்தினை தாபித்தலின் மூலம் எம்மால் மீண்டும் இந்த நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர நிலைமை தங்கியிருக்கும் அடிப்படையாவது அரசியலமைப்புச் சட்டமாகும். 1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற மற்றும் குழப்பமான தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.

எமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதாகவிருப்பின் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் சில மாற்றங்களைச் செய்யவே வேண்டும். விகிதாசார வாக்கெடுப்பு முறையில் உள்ள ஆக்க முறையிலான இலட்சணங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளையில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தற்கால தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றது.

இலக்கங்களினால் தேர்தல்களை வெல்லக் கூடியதாகவிருப்பினும் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படை வாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு பாராளுமன்றம் ஒரு நாட்டிற்கு பொருந்தாது. மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதிமன்றம் தாபித்தலை சட்டரீதியான மாற்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் விசேட அமைவினால் உலகரீதியான புவி அரசியலினுள் முக்கிய கவனம் தற்போது இலங்கையின்பால் செலுத்தப்பட்டுள்ளது. நாங்கள் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றுவோம்

நாங்கள் அனைத்து நாடுகளோடும் நட்புறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆயினும் ஒருபோதும் நாம் எமது சுயாதீனத் தன்மையைக் விட்டுக் கொடுக்க முடியாது. இராஜதந்திர உறவுகளின் போது அல்லது சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, எந்தவொரு நாடோடும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேசிய அபிமானத்தைப் பாதுகாக்கின்ற கௌரவமான ஆட்சியை நாம் உருவாக்குவோம்.

முக்கியமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எமது நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்களை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு உடமையாக்காதிருத்தல் எமது கொள்கையாகும்.

இலங்கையரை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவமான இனமாக்குவது எனது அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் போது ஒரு இனம் என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் எமது முன்னிலையில் உள்ள சவால்களை வெற்றி பெறவும் முடியும்.

நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமைப்படுகின்றேன். எனக்கு எனது நாடு தொடர்பான தொலைநோக்குள்ளது. வரலாற்றினால் தற்கால சந்ததிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பைக் கையேற்பதற்கு என்னுடன் ஒன்று சேருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.