ரிசாத் முஸ்லிம் பகுதிகளை அபிவிருத்தி செய்கிறார்; தமிழ் பகுதிகள் ஏன் அபிவிருத்தியடையவில்லை?: மன்னாரில் நாமல் கேள்வி!

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்து வாக்கெடுப்புக்களிலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டார்கள். ஆனால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுடைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கோ அல்லது உங்களுடைய நிலைகளை பற்றி யோசிப்பதற்கோ நடுநிலையானவர்களாக இருக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று (18) மாலை 4 மணி அளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து கூட்டம் இடபெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வன்னி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் கடந்த காலங்களில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளீர்கள்.

வன்னி பிரதேசத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுகின்ற போது வன்னியில் இருக்கின்றவர்கள் தமிழ் பேசுகின்றார்களா? சிங்களவர்களாக இருக்கின்றார்களா? என்று பார்க்காது முழு வன்னிக்குமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அபிவிருத்தி திட்டங்களானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழான அபிவிருத்தி வேலைத் திட்டங்களாகும்.

ஆனால் கடந்த 4 ½ வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்திலே இருக்கின்ற அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு தேவையானவர்களுக்கும், குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரமே தங்களது அபிவிருத்தி பணிகளை முன் நின்று வழங்கி இருக்கின்றார்கள்.

தங்களது சமூதாயத்திற்கு மாத்திரம் உதவிகளை வழங்குகின்ற சில சந்தர்ப்பங்களை நாங்கள் பார்க்கின்றோம். வேலை வாய்ப்புக்களை வழங்கினாலும் கூட அவர்களுடைய சமூதாயத்திற்கே வழங்குகின்றனர்.

பொது நோக்கு மண்டபங்களை அமைத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுடைய இனத்திற்கே வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு வாக்களிக்கின்றவர்களின் கிராமங்களுக்குச் செல்லுகின்ற போதும், ஏனைய கிராமங்களுக்குச் செல்லும் போதும் எங்களுக்கு பாரிய வித்தியாசம் தெரிகின்றது.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலும், வாக்களித்த மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய என்கின்ற வகையிலும் இந்த அரசாங்கம் உங்களை கவனத்தில் கொள்ளவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடைபெற்ற அனைத்து வாக்கெடுப்புக்களிலும் அரசாங்கத்திற்கு உதவி இருந்தார்கள்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்து வாக்கெடுப்புக்களிலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டார்கள்.

ஆனால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுடைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கோ அல்லது உங்களுடைய நிலைகளை பற்றி யோசிப்பதற்கோ நடு நிலையானவர்களாக இருக்கவில்லை.

ஆனால் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் தங்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற சகல வரப்பிரசாரங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தனது சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்று செய்து கொண்டு இருக்கின்றார்.

ஆனால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை திரும்பி பார்ப்பதாக இல்லை. வடக்கில் இருக்கின்ற அமைச்சர் என்கின்ற வகையில் அவர் தனது கடமைகளை செய்திருக்கவில்லை. நாங்கள் இனவாதத்தை கதைக்க இங்கே வரவில்லை.

முஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற அபிவிருத்திகள் தமிழ் கிராமங்களில் இடம்பெறவில்லை. இந்த குறைபாடுகளை வைத்தே குறிப்பிடுகின்றேன். இப்படியான நிலமைகள் மாறவேண்டும்.

இந்த நிலைமையை நாம் மாற்றுவதங்கு நமக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைப்பது தான்.

இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் தவர விடுவோமாக இருந்தால் வடமாகாணத்தில் இருக்கின்ற தமிழ், சிங்கள மக்களின் அபிவிருத்திகளை நாம் எந்த ஒரு காலத்திலும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

நாம் முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தி அடைவதற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழ் கிராமங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும்.

நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். சாதாரணமாக ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ அவசரமாக மன்னாரிற்கு வர முடியாது.

இங்கே இருக்கின்ற ஒரு அமைச்சரினால் அவருடைய அனுமதி இல்லாமல் இங்கு வந்தாலும் ஒரு வேளையும் செய்ய முடியாது. எங்களுடைய காலத்திலும் குறித்த அமைச்சர் அவ்வாறான வேலைகளை செய்து வந்தார்.

ஆனாலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் மன்னாரை வைத்திருந்தார். நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தேன்.

அதனால் தான் நாங்கள் அந்த இடைவெளி இருப்பதற்கு இடம் வைக்கவில்லை. தற்போது இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்போது இடைவெளியை வைத்துக் கொண்டு அரசியலை மேற்கொள்ளுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற எந்த விடையங்களும் கிடைக்கப் போவதில்லை. எனவே, நான் இந்த நேரத்தில் உறுதியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன், கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அமைக்கப்படுகின்ற அரசாங்கத்தில் மன்னார் பிரதேசத்தில் கத்தோலிக்க மற்றும் இந்து கிராமங்கள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படும்.

அதனால் எதிர்வருகின்ற தேர்தலில் உங்களுடைய முழுமையான ஆதரவை தந்து உதவுங்கள். இது தான் உங்களுடைய சமூதாயத்திற்கும் எங்களுக்கும் செய்கின்ற கௌரவமான விடையமாகும். அனைவரும் எங்களுடன் ஒன்று சேர்ந்து பயணியுங்கள்.

நாங்கள் வடக்கில் ஒரு பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மறு பிரதேசத்தில் அபிவிருத்தில் இல்லாமல் இருக்க தயாரானவர்கள் இல்லை. நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளோம். நலமான எதிர்காலம் அனைவருக்கும் அமையட்டும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.