சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த ரஷ்யாவின் முதல் மனித ரோபோ!

விண்வெளிக்கு ரஷ்யா முதல் முறையாக அனுப்பிய மனித உருவிலான ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா கடந்த 22ஆம் திகதி மனித உருவிலான ரோபோ ஒன்றை அனுப்பியது. இது அந்நாடு முதல் முறையாக அனுப்பும் மனித ரோபோ ஆகும்.

ஃபெடார் என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சோயுஸ் எம்.எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ஃபெடார், கடந்த 24ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே சென்றது.

ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

அதன் பின்னர், நேற்றைய தினம் அதன் கோளாறுகள் சரிசெய்யப்பட்டது. இந்நிலையில், விண்வெளி நிலையத்துடன் விண்கலம் மீண்டும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்த மனித ரோபோ, விண்வெளி நிலையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. மனித ரோபோ விண்வெளி நிலையத்தை அடைந்திருப்பதாக நாசா இன்று உறுதி செய்துள்ளது.

ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்யும். அத்துடன் அதன் செயல்திறனும் பரிசோதனை செய்யப்படும்.

ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இதேபோன்ற ரோபோவை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.