அமெரிக்க ஹவாய் மாகாணத்தில் வசித்து வருபவர் அமென்டா எல்லர். 35 வயது நிறைந்த இவர் யோகா பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதியில் தனது காரில் சென்றுள்ளார். பின்னர் அங்கு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அமென்டாவை காணவில்லை என பதறிய குடும்பத்தினர் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்த நிலையில் அனைவரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். மேலும் 2000 ஏக்கருக்கு அதிகமான அந்த காட்டில் அமென்டாவை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து 1000 நபருக்கு மேல் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில் அமென்டாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50000 டாலர் பரிசாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பல நாட்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே, இரு கால்களும் பலத்த காயமடைந்த நிலையில் சற்றும் நகர முடியாமல் மிகவும் சோர்வுடன் அமென்டா அமர்ந்து இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் அவரை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 17 நாட்களுக்கு மேல் உணவின்றி காட்டில் வழி தெரியாமல் சிக்கித்தவித்த அமென்டா எல்லர் இலை தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது நலமாக உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.