காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி வெகுகாலம் நீடிக்க போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது.
அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.
இருந்தாலும் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, மூத்த நிர்வாகிகள் கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக விரைவில் ராகுல் காந்தி அடுத்தகட்ட முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.